12 மணி நேரம் வேலை நீட்டிப்பு.. புதுச்சேரி முழுவதும் தொழிலாளர்கள் கடும் கொந்தளிப்பு
புதுச்சேரி: ஆசியாவிலேயே முதல் முறையாக 8 மணி நேரம் வேலை அமலான புதுச்சேரியில் வேலை நேரம் 8 மணிநேரத்துக்கு பதிலாக 12 மணி நேரம் என்று விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் அடுத்த மூன்று மாதத்துக்கான தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தி கொள்ள மாநில தொழிலாளர்துறை அனுமதி தந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆசிய நாடுகளிலேயே 8 மணி நேர வேலை என்பது புதுச்சேரியில் தான் முதன்முதலில் அமலாக்கப்பட்டது. அதற்கு நீண்ட வரலாறு உள்ள சூழலில் தற்போது காங்கிரஸ் அரசில் மாற்றப்பட்டுள்ளதை பலரும் சுட்டிக்காட்டி வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் தொழிலாளர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுவையில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக உருவெடுக்கவில்லை.. சுகாதாரத்துறை தகவல்
நலத் திட்டங்கள்
முதல்வரின் நாடாளுமன்ற செயலர் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன், இதுதொடர்பாக முதல்வர், தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில்,
கட்சித் தலைவர் ராகுல்காந்தி நமது நாட்டில் பல மாநிலங்களில் தொழிலாளர் நல சட்டங்கள் விதிகளை தளர்த்தி தொழிலாளர்கள் பல ஆண்டு காலமாக பெற்று இருந்த பல சலுகைகளை, உரிமைகளை பறிக்கும் விதமாக சட்ட திருத்தம் செய்வதை கடுமையாக எதிர்த்திருக்கிறார்.தொழிலாளர்கள்
இந்நிலையில் நமது மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தொழிலாளர் வேலை நேரம் அதிகரிப்பு, அதற்கு கொடுக்கப்பட வேண்டிய இரட்டிப்பு ஊதியம் போன்றவற்றிற்க்கு விதிகளை தளர்வு செய்திருப்பது சட்ட விரோதம் மட்டுமல்ல. தொழிலாளர் விரோதமான செயலும் ஆகும். கொரோனாவில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தொழிற்சாலை அதிபர்கள் மட்டுமல்ல. உண்மையாக உணவுக்கும், அடிப்படை தேவைக்கும் அல்லல்படுவது தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள்தான்.
மறுபரிசீலனை
அவர்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் கொரோனா தடை காலத்தில் ஊதியம் வழங்க வேண்டும், யாரையும் வேலையை விட்டு நீக்க கூடாது போன்ற அறிவிப்புகள் வெறும் அறிக்கைகளாகவே இருக்கிறது. ஆனால் இதற்கு மட்டும் விதிகளை தளர்த்தியிருப்பது வேதனையாக உள்ளது. கட்சி தலைவர் பேச்சுக்கு மாறாக அரசு நடப்பது பொது மக்களிடத்திலும், மற்ற கட்சிகளிடத்திலும் கடுமையான விமர்சனத்தை உண்டாக்குகிறது. எனவே தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்கள்
ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் கூறுகையில், நோய்தொற்று காரணமாக ஏற்பட்ட பொது முடக்கத்தை சாக்காக வைத்து உற்பத்தி பெருக்கம் என்ற பெயரில் வேலை நேரத்தை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு வெள்ளோட்டமாக பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்களை முடக்கி உள்ளது.
வழிவகுக்கும்
ஆனால் பாஜக அல்லாத ஆட்சி இருக்கக்கூடிய புதுச்சேரியில், ஆசியா கண்டத்திலேயே 8 மணி நேர வேலை உரிமையை உயிர் தியாகத்தின் மூலம் பெற்ற புதுச்சேரி மண்ணில் வேலை நேர அதிகரிப்பை ஏற்க முடியாது. தொழிலாளர் விரோத மத்திய பாஜக அரசின் அடியொற்றியே புதுச்சேரி அரசு செயல்படுகிறது. இது காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலோடு செயல்படுத்தப்படுகிறதா? என்பதை ஆட்சியாளர்கள் தெரியப்படுத்த வேண்டும். வேலை நேர அதிகரிப்பு என்பது தொழிலாளர்களை சுரண்டுவது மட்டுமல்ல, ஆட்குறைப்புக்கும் வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
12 மணி நேரம்
சிஐடியூ செயலர் சீனுவாசன் கூறுகையில், புதுச்சேரியில் 12 உயிர்களை தியாகம் செய்து 8 மணி நேரம் வேலை உரிமை பெற்றோம். தற்போது தொழிலாளர் சட்டங்களை சுருக்குவது. மூன்றாண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது. 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணிநேரமாக்குவது, தொழிற்சாலை சட்டங்களை நீக்குவது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. புதுச்சேரியில் நடைபெறும் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு ராகுல் காந்தி அவர்கள் அறிவிப்பிற்கு மாறாக எட்டு மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக அறிவித்துள்ளார்.
துரோகம்
புதுச்சேரியில் தான் ஆசியத் துணைக் கண்டத்திலேயே 8 மணி நேர வேலை உரிமைக்கான தொழிலாளர் வர்க்கம் 1936- ம் ஆண்டு பிரெஞ்ச் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி ஜூலை 30ம் நாள் 12 தோழர்கள் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகி ரத்தம் சிந்திய மண் இந்த மண். இந்த தியாக பூமியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான நாராயணசாமி அரசு, தொழிலாளர்களின் உயிர்த் தியாகங்களுக்கு மதிப்பளிக்காமல் 8 மணி நேரத்தை 12 மணி நேரமாக மாற்றி அறிவித்திருப்பது புதுச்சேரி தொழிலாளி வர்க்கத்திற்கு அதிர்ச்சியாகவும் இழைத்திட்ட துரோகமாக சிஐடியு பார்க்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
உரிமை
அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவர் எம்எல்ஏ அன்பழகன் கூறுகையில், உற்பத்தியை பெருக்க தொழிற்சாலைகளில் தேவையான தொழிலாளர்களை நியமனம் செய்து ஷிப்ட் முறையில் தொழிற்சாலைகள் இயங்கும் நேரத்தை அதிகரிக்கலாம். அதைவிடுத்து தொழிலாளர்கள் போராடி பெற்ற 8 மணிநேர வேலை என்ற உரிமையை ஆளும் காங்கிரஸ் அரசு நசுக்கியுள்ளது.
திமுக துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு தொழிலாளர் நலனை கருத்தில் கொள்ளாமல் தொழிலதிபர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்திருப்பது கண்டிக்கதக்க ஒன்றாகும். ஒருபுறம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 12 மணிநேர வேலையை எதிர்த்து குரல் கொடுக்கிறார்.
12 மணி நேரம்
ஆனால் அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான இந்த அரசு 12 மணிநேர வேலையை புதுச்சேரி மாநிலத்தில் தொழிலதிபர்களுக்கு சாதமாக அமல்படுத்தி இருப்பது என்பது காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. வறுமையை பயன்படுத்தி அவர்களின் உடல் உழைப்பை சுரண்டும் இந்த 12 மணிநேர வேலை அறிவிப்பை புதுச்சேரி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனறு குறிப்பிட்டுள்ளார்.
போராட்டம்
புதுச்சேரி அரசின் இந்த முடிவை கண்டித்து கதிர்காமத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தை ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாநில முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.