எச். ராஜா மீதான ரூ4 கோடி பதுக்கல் புகார்- காரைக்குடியில் பாஜக பிரதிநிதி விசாரணை- சரமாரி புகார்கள்!
காரைக்குடி: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எச். ராஜா மீதான ரூ4 கோடி தேர்தல் செலவு பணத்தை பதுக்கிய விவகாரம் தொடர்பாக பாஜகவின் அமைப்பு செயலாளர் கேசவ விநியாகம் இன்று காரைக்குடியில் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் போது எச். ராஜா, பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
சட்டசபை தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு எச். ராஜா தோல்வி அடைந்தார். ஏற்கனவே லோக்சபா தேர்தலிலும் போட்டியிட்டு எச். ராஜா தோல்வி அடைந்தார்.
மின்வாரியத்துக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏன்? அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது ஏன்? தங்கமணி பதில்
நிர்வாகிகள் மீது புகார்
தமது தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் மீதே எச்.ராஜா குற்றம்சாட்டினார். இதனை நிராகரித்த சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், எச். ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூண்டோடு கட்சி பதவிகளை ராஜினாமா செய்தனர்.
ரூ4 கோடி தேர்தல் பணம் பதுக்கல்
மேலும் சட்டசபை தேர்தல் செலவுக்கு கட்சி மேலிட கொடுத்த பணத்தில் ரூ4 கோடியை எச். ராஜா பதுக்கிக் கொண்டார்; இந்த பணத்தில்தான் எச்.ராஜா தற்போது வீடு கட்டி வருகிறார் என்றும் ராஜினாமா செய்த பா.ஜ.க. நிர்வாகிகள் புகார் பட்டியல் வாசித்தனர்.
எச். ராஜா மீது விசாரணை
எச்.ராஜா மீதான இந்த புகார்கள் டெல்லி பாஜக மேலிடம் வரை சென்றது. இதனால் வேறுவழியே இல்லாமல் எச்.ராஜா மீதான புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் தெரிவித்திருந்தார்.
காரைக்குடியில் விசாரணை
இந்நிலையில் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநியாகம் காரைக்குடிக்கு சென்றார். தமிழக பாஜக தலைமை உத்தரவுப்படி எச்.ராஜா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தினார். குறிப்பாக ரூ4 கோடி பணம் பதுக்கியது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் அவர் கேட்டார்.
ஆதாரங்களுடன் புகார்கள்
இந்த விசாரணையின் போது எச்.ராஜா மீது ஏராளமான புகார்களை பா.ஜ.க. நிர்வாகிகள் சரமாரியாக அடுக்கி இருக்கின்றனர். இதற்கான ஆதாரங்களையும் பா.ஜ.க. நிர்வாகிகள், கேசவ விநாயகத்திடம் கொடுத்தனர். ஆனால் இன்றைய விசாரணையில் எச்.ராஜா பங்கேற்கவில்லை.
எச். ராஜாவிடம் விளக்கம் கேட்கப்படும்
அனைத்து புகார்களையும் கேட்டுக் கொண்டார் கேசவ விநாயகம். இதனடிப்படையில் எச்.ராஜாவிடம் விளக்கம் கேட்கப்பட இருக்கிறது. இதன்பின்னரே எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? இல்லையா என்பது தெரியவரும் என்கின்றனர் பாஜக நிர்வாகிகள்.