பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சி....குட்டி இளவரசியை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து கொண்டாடிய தந்தை
பெண் குழந்தை பிறந்ததை பெருமைப்படுத்தி கொண்டாடிய ஒரு தந்தை தனது குட்டி இளவரசியை ஹெலிகாப்டரில் வீட்டுக்கு அழைத்து வந்து அசத்தினார்.
புனே: மகள் பிறந்த மகிழ்ச்சியை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர் ஒரு பெற்றோர். பல ஆண்டுகளுக்கு பிறகு பெண் குழந்தை பிறந்ததால் அந்த குட்டி இளவரசியை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து கொண்டாடியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனோவில் இந்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Recommended Video
பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றி கொன்ற காலமும் இருந்தது. ஆனால், இன்றைய தலைமுறையினர் பலர் பெண் குழந்தையை விரும்பி ஏற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில் பெண் குழந்தை பிறந்ததை பெருமைப்படுத்திய சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து உள்ளது.
அங்குள்ள புனே மாவட்டம் கேத் தாலுகாவில் உள்ள செல்காவ் பகுதியை சேர்ந்தவர் விஷால் ஜரேகர், 30. வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவிக்கு கடந்த ஜனவரி 22ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதனால் தந்தை விஷால் ஜரேகர் மனமகிழ்ச்சி அடைந்தார்.
நீங்க வாங்க.. சட்டென அழைத்த முதல்வர்.. வியந்து பார்த்த பட்டியல் இன பெண்! விழுப்புரத்தில் நெகிழ்ச்சி!
வாடகை ஹெலிகாப்டர்
தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக புதிய முறையை கையாள நினைத்தார். தனது மனைவியுடன் குழந்தையை ஹெலிகாப்டரில் தனது வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. அதன்படி கடந்த 2ஆம் தேதி ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தார்.
குட்டி இளவரசி
போசரி பகுதியில் உள்ள மாமியார் வீட்டில் இருந்து, பெண் குழந்தை மற்றும் மனைவியை ஹெலிகாப்டரில் ஏற்றி தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு வசதியாக தனது விவசாய நிலத்தில் தற்காலிக ஹெலிபேடும் அமைத்திருந்தார். இந்த நிகழ்வை அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்தனர்.
பெண் குழந்தையால் மகிழ்ச்சி
இது குறித்து பேசிய விஷால் ஜரேகர் கூறுகையில், "எங்கள் வீட்டில் நீண்ட காலமாக பெண் குழந்தை பிறக்கவில்லை. தற்போது பெண் குழந்தை பிறந்தது எல்லையில்லா மகிழ்ச்சியை தந்தது. இந்த சந்தோசத்தில் எனது குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்தேன். எனது மகளுக்கு ராஜலட்சுமி என்று பெயர் வைத்துள்ளேன் என்றார். விஷால் ஜரேகரின் இந்த செயலை நேரில் பார்த்தவர்கள் வியப்பு அடைந்தனர். ஊடகங்களிலும் இந்த செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது.
ராஜஸ்தானில் ஹெலிகாப்டர்
கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இது போல ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நாகர் மாவட்டம் நிம்டி சந்தாவட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹனுமன் பிரஜாபத். இவரது மனைவி சுகி தேவி. நாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அண்மையில் சுகி தேவிக்கு பெண் குழந்தை பிறந்தது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் அவர்கள் அளவில்லா மகிழ்ச்சியில் திளைத்தனர்.இதைத் தொடர்ந்து ஹெலி காப்டரில் பெண் குழந்தையை அழைத்து வந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
வாடகை எவ்வளவு
ஹெலிகாப்டரில் குழந்தையை அழைத்து வருவது, எனது தந்தை மதன்லால் கும்ஹாரின் திட்டமாகும். தனது பேத்தியை சிறப்பாக அழைத்து வர அவர் முடிவு செய்தார். குழந்தைக்கு ரியா என்று பெயர் வைத்துள்ளோம். குழந்தையில் ஆண், பெண் இரண்டும் ஒன்றே. என் குழந்தை என்ன படிக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ அதைச் செய்வேன் என தந்தை பிரஜாபத் கூறினார். ஹெலிகாப்டர் அழைத்து வருதல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், மேள தாளம் என மொத்தம் ரூ.4.5 லட்சத்தை செலவு செய்துள்ளார் ஹனுமன் பிரஜாபத்.