ராமநாதபுரத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு144 தடை உத்தரவு.. நள்ளிரவு முதல் அமல்! ஆட்சியர் அறிவிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இன்று தொடங்கி அடுத்த இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடியவர் இம்மானுவேல் சேகரன். 1957ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி இவர் சுட்டுக் கொள்ளப்பட்டார்.
இவரது உடல் பரமக்குடியில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ராமநாதபுரம் ஆசிரியர் தேர்வு.. யார் இந்த ராமச்சந்திரன்? முழுவிபரம்
தடை
இதற்கிடையே இந்த ஆண்டு இம்மானுவேல் சேகரன் நினைவு நாளன்று எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறாமல் இருக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்தச் சூழலில் பாதுகாப்பு கருதி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் பிறப்பித்துள்ளார். இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் இந்த தடை உத்தரவு வரும் அக். 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இரு மாதங்கள்
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "'ராமநாதபுரம் பரமக்குடியில் வரும் செப்.11ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினமும் அக்டோபர் 30இல் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜையும் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க இன்று நள்ளிரவு முதல் அடுத்த 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
கட்டுப்பாடுகள்
இதன் காரணமாக மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. மேலும்,பொது இடங்களில் 5க்கும் மேற்பட்டோர் கூடவும் தடை விதிக்கப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் 15ஆம் தேதி வரையும், அதேபோல அக்டோபர் 25 முதல் 31 வரையும் தலைவர்களின் நினைவு, பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்களில் வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கன்டிரோல் ரூம்
இமானுவேல் சேகரன் நினைவு நாள் காரணமாகப் பாதுகாப்புப் பணியில் மாவட்டம் முழுக்க சுமார் 7,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாவட்ட எல்லைப் பகுதிகளில் மொத்தம் 145 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், பரமக்குடியில் கன்டிரோல் ரூம் அமைத்துக் கண்காணித்து வருகிறோம். மேலும், இமானுவேல் சேகரன் நினைவிடம் அருகே புதிதாகப் புறக்காவல் நிலையம் ஒன்றை அமைந்து உள்ளோம்.
தடை
வாடகை வாகனங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வருவோருக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், சொந்த வாகனங்களில் வருவோர் டிஎஸ்பி அலுவலகங்களின் வாகன அனுமதிச்சீட்டு பெற்று வர வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கிகள் எதுவும் அமைத்து இருக்கக் கூடாது. வரும் வழிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
10 அரசியல் தலைவர்கள்
அஞ்சலி செலுத்துவோரின் வசதிக்காக அரசு பேருந்து கழகம் மூலம் 200 பேருந்து வசதி செய்து தரப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி பேருந்துகளில் ஒரு போலீசாரும் பயணிப்பார். இதுவரை 10 அரசியல் தலைவர்கள் மட்டுமே நேரம் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். தனி நபர்களைப் பொறுத்தவரை இதுவரை 795 பேர் சொந்த வாகனங்களில் வர அனுமதி கேட்டுள்ளனர்" என்றார்.