மலேசியா பத்துமலை முருகனை விட உயரமான 146 அடி உயர முத்துமலை முருகன் சிலை கும்பாபிஷேகம்
உலகின் மிக உயரமான 146 அடி உயரமுள்ள முருகப் பெருமான் சிலை சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு அருகில் திறக்கப்பட உள்ளது.
சேலம்: உலகின் மிக உயரமான 146 அடி உயரமுள்ள முத்துமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. சுமார் 3 கோடி ரூபாய் செலவில், பஞ்சவர்ண நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள இச்சிலையை உருவாக்கும் பணி, கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி தொடங்கப்பட்டு பல்வேறு இடர்களுக்கு நடுவில் இனிதே நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.
கலியுக தெய்வம் என்று போற்றப்படும் முருகப் பெருமானுக்கு தமிழ்நாட்டில் திருப்பரங்கிரி, திருச்சீரலைவாய், திருஆவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என அறுபடை வீடுகள் உள்ளன. அதே போல் குன்றிருக்கும் இடமெலாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்வார்கள். அதை உறுதிப்படுத்தும் விதமாக எங்கல்லாம் மலை இருக்கிறதோ அங்கெல்லாம் முருகப்பெருமான் குடிகொண்டுள்ளார் என்பது இந்துக்களுக்குத் தெரியும்.

முருகப்பெருமானுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏராளமான கோயில்கள் இருந்தாலும் கூட, நம் அனைவரின் மனதிலும் பளிச்சென்று நினைவுக்கு வருவது என்னவோ, மலேசியா நாட்டிலுள்ள பத்துமலை முருகன் கோயில் தான். சிங்கப்பூர், மலேசியாவிற்கு சுற்றுலா செல்பவர்கள் கூட பத்துமலை முருகனை தரிசிக்காமல் ஊர் திரும்ப மாட்டார்கள் என்பது நிச்சயம்.
மலை மேல் முருகனின் ஆலயம் இருந்தாலும், நம்மை முதலில் வரவேற்பது என்னவோ, மிகப்பிரமாண்டாக. கையில் வேலுடன் பொன் நிறத்தில் காட்சியளிக்கும் 140 அடி உயரமுடைய முருகன் சிலை தான். அந்தச் சிலையைப் பார்க்கும் போதே நாம் அனைவரும் பயபக்தியுடன் கையெடுத்துக் கும்பிட்டு கண்ணத்தில் போட்டுக்கொள்வோம்.

அந்த சமயத்தில் நம் மனதில் தோன்றுவது என்னவோ, நம் தமிழ்நாட்டிலும் இதே மாதிரி ஒரு பிரமாண்டமான முருகன் சிலை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பது தான். அந்த எண்ணம் தற்போது செயல் வடிவம் பெற்றுள்ளது. அதுவும் பத்துமலை முருகன் சிலையின் உயரத்தைக் காட்டிலும் உயரமாக 146 அடியில் சேலம் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சிலை உருவாக்கத்திற்கு செயல் வடிவம் கொடுத்தவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்து நடராஜன் என்பவர் தான்.
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடிக்கு அருகில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புத்திரகவுண்டம்பாளையம் என்னும் ஊரில் முருகன் கோயில் உள்ளது. அங்கு தான் நடராஜன் இந்த 146 அடி உயர உலகின் மிக உயரமான பஞ்சவர்ண நிறத்தில் முருகன் சிலையை உருவாக்கும் பணியை ஆரம்பித்து வைத்தார். பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூரைச் சேர்ந்த ஸ்தபதி தியாகராஜன் என்பரின் தலைமையிலான குழுவினர் தான் இந்த 146 அடி உயர முருகன் சிலையையும் வடிவமைக்கும் பணியை செய்தனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதியன்று பூமி பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் சோதனையாக முத்து நடராஜன் திடீரென உடல்நலக் குறைவால் இறந்த போதும், அவரது வாரிசுகளான ஸ்ரீதரன், வசந்தராஜன், ஞானவேல் மற்றும் மகள் பத்மாவதி ஆகியோர் இப்பணியை தொடர்ந்து செய்து முடித்துள்ளனர்.
சுமார் 3 கோடி ரூபாய் செலவில், 146 அடி உயரத்தில், வசீகரிக்கும் சிரித்த முகத்துடன், வலது கை அபயஹஸ்த முத்திரையுடன் ஆசீர்வதிப்பது போன்றும், இடது கையில் வேலை பிடித்தும் மணிமகுடம் சூடிய நிலையில் ஆடை அணிகலன்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
சிலையின் அருகிலேயே ஒரு லிஃப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் மேலேறி வந்து முருகன் கையில் உள்ள வேலுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யலாம். இச்சிலையை உருவாக்கும் பணியை செய்து வரும் முத்து நடராஜனின் மகன் ஸ்ரீதர் கூறுகையில், நாங்கள் இந்த சிலையை சாதனைக்காக வடிவமைக்கவில்லை. முருக பக்தர்களைத் திருப்திப்படுத்தவே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை கட்சி பாகுபாடின்றி அனைவரும் அதிக அளவில நேசிக்கின்றோம். கட்சிப் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் இந்த ஆன்மீகப் பணியை செய்து வருகிறோம் என்றார்.
தற்போது பணிகள் நிறைவடைந்ததை அடுத்து நாளைய தினம் 6ஆம் தேதியன்று 146 அடி உயர பிரமாண்டமான முருகப் பெருமானின் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருளாசியைப் பெற்றுச் செல்லுங்கள்.












Click it and Unblock the Notifications