சகோதரி மேல அக்கறை இருக்கலாம்.. அதற்காக இப்படியா.. சர்ருன்னு காரை கிளப்பி.. சேலத்தை அதிர வைத்த இளைஞர்
சேலம்: சகோதரியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பதற்றத்தில் சாலையில் இருந்த தடுப்புகள் அனைத்தையும் இடித்து விபத்தை ஏற்படுத்தியுள்ளார் சேலத்தைச் சேர்ந்த இளைஞர்.
Recommended Video
கொரோனா இரண்டாம் அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து, தமிழகத்தில் நாள்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்த நிலையில்தான், சேலத்தில் கொரோனா நோயாளியை காப்பாற்ற அவரின் சகோதரர் எடுத்த முயற்சி விபரீதமாகிவிட்டது.
சகோதரிக்கு மூச்சு திணறல்
சேலம் ஐந்து ரோடு அடுத்துள்ள நரசோதிபட்டி பகுதியை சேர்ந்த அஜித் குமார் என்ற இளைஞர் கட்டிட கலை நிபுணர் பணி செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது சகோதரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து தனது பலேனோ, காரில் சகோதரியை அமர வைத்து கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக அவசர அவசரமாக விரைந்து காரை இயக்கி வந்து கொண்டிருந்தார்.
அக்கறையால் அதி வேகம்
அந்த சமயத்தில் சகோதரிக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படுகிறதா என்று பின்புறம் திரும்பி பார்த்த ஒரு கணத்தில், கட்டுப்பாட்டை இழந்தது அவர் கார். எதிர்பாராதவிதமாக நான்கு ரோடு அருகே உள்ள மேம்பால சாலையில் பிளாஸ்டிக் கூம்பு வடிவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது கார் ஏறியது. இதனால் மேலும் தடுமாறிய கார், இரும்பால் வைக்கப்பட்ட சாலை தடுப்புகளிலும் மோதியது.
சாலை தடுப்புகள் சேதம்
இதில் 50க்கு மேற்பட்ட தடுப்புகள் முழுவதும் இடித்து தள்ளப்பட்டு விபத்துக்குள்ளானது. இதில், அவரது காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதனை அடுத்து காரை நிறுத்திய அவர், காவல்துறையினரிடம் மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக கூறி கோரிக்கைவிடுத்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினரும் அதற்கு அனுமதித்தனர். சகோதரியை மருத்துவமனையில் அனுமதித்த அஜித் குமார் அதன் பிறகு காவல் துறையிடம் வந்து உரிய விளக்கம் அளித்தார்.
போலீஸ் விசாரணை
அவரை விசாரணைக்காக சேலம் அஸ்தம்பட்டி காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவர் கூறிய தகவல்கள் உண்மை எனத் தெரியவந்தது. அதன்பிறகு அவரை காவலர்கள் மனிதாபிமான அடிப்படையில் திருப்பி அனுப்பினர். சகோதரியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பதற்றத்தில் சாலையில் இருந்த அனைத்து தடுப்புகளையும் உடைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.