மோடி ஒரு சிற்பி... செயற்கை மின்தட்டுப்பாட்டில் விஞ்ஞான ஊழல் செய்யும் திமுக... அடடே அண்ணாமலை!
தமிழகத்தில் செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, வெளி மார்க்கெட்டில் மின்சாரத்தை வாங்கி அதில் ஊழல் செய்ய தி.மு.க அரசு முயற்சிக்கிறது என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம்: தமிழகத்தில் செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, வெளி மார்க்கெட்டில் மின்சாரத்தை வாங்கி அதில் ஊழல் செய்ய தி.மு.க அரசு முயற்சி செய்வதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். எதை எல்லாம் பார்க்க முடியாதோ அதில் எல்லாம் தி.மு.க. விஞ்ஞான முறையில் ஊழல் செய்கிறது என்றும் விமர்சித்துள்ளார். மோடி சிற்பி போல நாட்டை செதுக்குவதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு பாராட்டு தெரிவித்து, மக்களுக்கு நன்றி கூறும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், நாடு முழுவதும் அரசியல் ஒரு பக்கமாகவே சென்று கொண்டிருக்கிறது என்றார்.
நாட்டின் கடைக்கோடி மனிதருக்கும் பயனளிக்கக்கூடிய மக்கள் நலத்திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாகவும், அடுத்த 5 வருடங்களுக்குப் பிறகு நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு தொலைநோக்கித் திட்டங்களை பிரதமர் செயல்படுத்தி வருவதாகவும், வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யப்படுவதை குறைக்கும் வகையில், தற்போது பெட்ரோலில் 10 சதவீதம் என்ற அளவில் கலக்கப்படும் எத்தனாலின் அளவு 2024-ம் ஆண்டிற்குள் 20 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். பெட்ரோலுக்கு மாற்றாக இ-வாகனங்களை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் இதற்கு மத்திய அரசு 50,000 ரூபாய் மானியம் வழங்குகிறது என்றும் அண்ணாமலை கூறினார்.

மோடி ஒரு சிற்பி
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, நாடு சுதந்திரமடைந்த 67 ஆண்டுகளில் 5.50 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டதாக குறிப்பிட்ட அண்ணாமலை, 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டிருப்பதாகவும், பாறையின் தேவையற்ற பாகங்களை நீக்கி அழகான சிலையை உருவாக்கும் சிற்பி போல, பிரதமர் மோடி நாட்டின் நலனை செதுக்கி சீர்படுத்தி வருகிறார்.

திமுக ஆட்சி எப்போது முடியும்
மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்த பின்னரும், 26 சதவீதம் சிறுபான்மை மக்கள் நிறைந்த கோவா மாநிலத்திலும், 52 சதவீதம் சிறுபான்மை மக்கள் நிறைந்த மணிப்பூர் மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சிக்கு தொடர்ச்சியாக 2-ம் முறை ஆட்சி செய்யும் வாய்ப்பினை பொதுமக்கள் வழங்கியுள்ளனர். ஆனால் தமிழகத்தில் 11 மாத காலத்திலேயே திமுக அரசு மீது மக்களுக்கு சலிப்பு வந்து விட்டது. திமுக ஆட்சி தொடர்வதை மக்களும் நீதிமன்றமும் மட்டுமே முடிவு செய்யமுடியும். அனைத்து பிரச்சினைகளுக்கும் மத்திய அரசின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள முடியாது.

மின் தட்டுப்பாடு ஏன்?
தமிழகத்தில் தற்போது 12,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் 7,500 மெகாவாட் மின்சாரம் மத்திய அரசு வழங்குகிறது. இதில் 5% மட்டுமே மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு மின்சாரம் வழங்காததால்தான் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு என முதல்வர் வேடிக்கையாக பேசுகிறார்.

விஞ்ஞான முறையில் ஊழல்
தமிழகத்தில் செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, வெளி மார்க்கெட்டில் மின்சாரத்தை வாங்கி அதில் ஊழல் செய்ய தி.மு.க அரசு முயற்சிக்கிறது. எதை எல்லாம் பார்க்க முடியாதோ அதில் எல்லாம் தி.மு.க. விஞ்ஞான முறையில் ஊழல் செய்கிறது என்று விமர்சித்தார்.

டாஸ்மாக்கை மூட முடியுமா?
டாஸ்மாக்கை வைத்துதான் தமிழக அரசு நிர்வாகம் செய்கிறது. டாஸ்மாக்கை மூடினால் அரசு அலுவலர்கள் யாருக்கும் தமிழக அரசால் அடுத்த மாதம் சம்பளம் வழங்க முடியாது. டாஸ்மாக்கை மூட வேண்டும் என ஏற்கனவே ஒருநாள் உண்ணாவிரதம் இருந்த ஸ்டாலினால் தற்போது முதல்வராக இருந்தும் கூட தமிழகத்தில் டாஸ்மாக்கை மூட முடியாது.

சமூக நீதி எது?
தி.மு.க.வின் ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி செல்கிறது. சமூக நீதி என்கிற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் தி.மு.க. இந்த வார்த்தையை பயன்படுத்தி வருகிறது. ஆனால் உண்மையான சமூக நீதிக்கு பாஜகதான் எடுத்துக்காட்டு. திமுகவில் வாரிசு அரசியல் மட்டுமே நடக்கும்போது சமூக நீதியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். மோடிக்கு பிறகு அவரது வாரிசு யாரும் பிரதமர் பதவிக்கு வரப்போவதில்லை என்று கூறினார்.

சமூக வலைத்தளத்திற்கு பயம்
முதல்வரின் துபாய் பயணம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ள பாஜக பிரமுகர் அருள் பிரகாஷ்க்கு மேடையில் சால்வை அணிவித்து அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார். ஜெயிலுக்கு போயிட்டு வந்தால்தான் தமிழகத்தில் பிரபலமாக முடியும். மிசாவை பார்த்து பயப்படாத ஸ்டாலின் சமூக வலைத்தளத்திற்கு பயப்படுகிறார் என்றும் அண்ணாமலை விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications