பிள்ளை பிடிக்கும் கட்சி பாஜக.. தமிழிசை, சூர்யா சிவாவை குறிப்பிட்டு பேசிய ஆர்எஸ் பாரதி..சொன்னது என்ன?
சேலம்: தமிழகத்தில் பாஜக பிள்ளை பிடிக்கும் கட்சியாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள் தமிழிசை சவுந்தரராஜன், திருச்சி சிவாவின் மகன் சூர்யா ஆகியோரை பாஜக இணைத்து கொண்டுள்ளது என திமுகவின் ஆர்எஸ் பாரதி விமர்சனம் செய்தார்.
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற அலுவல் மொழி கூட்டத்தில் பேசுகையில், ‛‛ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தியை கொண்டு வர வேண்டும்'' என விருப்பம் தெரிவித்தார். இது சர்ச்சையை கிளப்பியது. மேலும் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு சில பரிந்துரைகளை வழங்கியது.
அதில் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இதுவும் விவாதத்துக்கு உள்ளானது.
குஜராத் தேர்தல்: பலே பிளான் போடும் பாஜக.. நகர்ப்புற தொகுதிகளுக்கு தனி ஸ்கெட்ச்!
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு
இந்நிலையில் தான் மத்திய அரசு குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழியை திணிக்க முயற்சிக்கிறார் என திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் தொடர்ர்ந்து ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக இந்தி திணிப்புக்கு எதிரான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆர்எஸ் பாரதி பேச்சு
அதன்படி சேலம் மாவட்டம் ஓமலூரில் திமுக சார்பில் இந்தி எதிர்ப்பு தீர்மானத்தின் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் மூத்த தலைவரான ஆர்எஸ் பாரதி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்தி தெரிந்தவர்கள் வடமாநிலங்களில் வேலை கிடைக்காமல் தமிழகம் வந்து பணி செய்கின்றனர். தற்போது பல மாநிலங்களில் அதன் தாய்மொழி அழிந்து வருகிறது. ஆனால் அண்ணா வகுத்த இருமொழி கொள்கை மூலம் தமிழகத்தில் தமிழ் மொழி நிலைத்து நீடித்து நிற்கிறது.
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு
இதனை பொறுத்து கொள்ள முடியாமல் மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது. எந்த வடிவில் இந்தியை திணிக்க முயன்றாலும் அதனை தமிழகம் அனுமதிக்காது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தமிழ்நாடு, திமுகவின் வரலாறு தெரியாமல் மேடைக்கு மேடை பேசி வருகிறார். கோவை கார் வெடிப்பை திசை திருப்பும் வகையில் பேசி வருகிறார். இதை அண்ணாமலை கைவிட வேண்டும்.
பிள்ளை பிடிக்கும் கட்சி
பாஜக பிள்ளை பிடிக்கும் கட்சியாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மகள் தமிழிசை, திமுகவின் திருச்சி சிவாவின் மகன் சூர்யா உள்ளிட்டவர்களை பாஜக கட்சியில் சேர்த்துள்ளது. இந்த கட்சியுடன் யாரும் தொடர்பு கொள்ள கூடாது. தமிழையும், தமிழ்நாட்டையும் காக்கும் தலைவராக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்'' என்றார்.