உஷார்!மேட்டூர் அணையில் 50000 கனஅடி நீர் திறக்க வாய்ப்பு.. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
சேலம்: கர்நாடகத்தில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்) அணைகள் நிரம்பியுள்ளன.
இதனால் அணைகளில் இருந்து வெளியேறும் நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளன. 2 வாரங்களுக்கு முன் கர்நாடக அணைகளில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 1.31 லட்சம் கனஅடி வரை திறக்கப்பட்டது.

நிரம்பிய மேட்டூர் அணை
இதனால் கர்நாடகத்தில் இருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. மேலும் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த நீர்திறப்பு காரணமாக கடந்த மாதம் 16ம் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளவான இந்நிலையில் 120 அடியை எட்டியது. இதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கை உருவாக்கியது.

மீண்டும் அதிகரித்த நீர்வரத்து
இதன் தொடர்ச்சியாக கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் குறைந்த நீர்வரத்தால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. கடந்த மாதம் 26ம் தேதி அணையில் இருந்து நீர்திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய துவங்கி உள்ளது. இதனால் மீண்டும் தமிழகத்துக்கு நீர்வரத்து துவங்கி உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று இரவு 31 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து 7 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து
தற்போது தொடர்ந்து அணைக்கான நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இன்று காலை அணைக்கு வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாகவும், அதன்பிறகு தற்போது 55 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 41,300 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் காவிரி ஆற்றின் தமிழகத்தின் நுழைவுபகுதியான பிலிகுண்டுவில் 70 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்னும் அதிகரிக்கும். இதனால் அணையில் இருந்து திறக்கும் நீரின் அளவு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை
இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கும் நீரின் அளவு அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதால் காவிரியில் வெள்ள அபாயம் உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என பல்வேறு கிராமங்களில் தண்டோரா மூலம் வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications