கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின: அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறப்பால் பொங்கி வரும் காவிரி
கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால், தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் 114 அடி வரை நீர்மட்டம் இருப்பதால், ஒகேனக்கல் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது.
சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன. அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் 114 அடி வரை நீர்மட்டம் இருப்பதால், ஒகேனக்கல் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது.
Recommended Video
தமிழகம், கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, இரண்டு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 6,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று காலை நிலவரப்படி பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 14,000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாக குறைந்தது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகளிலிருந்து நீர்திறப்பு அதிகரித்துள்ளதால், நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, இன்று காலை வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கலில் ஐந்தருவி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதையின் மேல் தண்ணீர் செல்கிறது.
காவிரி ஆற்றங்கரையில் ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து கன மழை மற்றும் நீர்திறப்பு அதிகரிப்பு காரணமாக இன்று ஒரே நாளில் வினாடிக்கு 13,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், பிலிகுண்டுலுவில், மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தொடர்ந்து நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர் அணையில் 114 அடி வரை நீர்மட்டம் இருப்பதால், ஒகேனக்கல் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேட்டூர் அணை நீர் மட்டம் 120 அடியாகும். அணை நிரம்பும் பட்சத்தில் உபரி நீர் திறந்து விடப்படும். மேட்டூர் அணை நிரம்பிவருவதால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications