"எங்ககிட்டியேவா?" சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம்.. ஓட்டலை நொறுக்கிய இளைஞர்கள்
சேலம்: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அந்த ஓட்டலையே அடித்து நொறுக்கிய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டலில் உள்ள பொருட்களை சூறையாடியதுடன் மட்டுமல்லாமல், உரிமையாளரையும் அந்த இளைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் ஒருவரை கைது செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.
முன்னாள் திமுக எம்பி மஸ்தானின் வாய், மூக்கை பிடித்து மூச்சை திணறடித்து கொலை வழக்கு .. சகோதரர் கைது
அதிகரிக்கும் 'ஓசி சாப்பாடு' அலம்பல்கள்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஓட்டல் உரிமையாளர்கள் மீது 'ஓசி சாப்பாடு' கும்பல் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஓட்டல் இருக்கும் அதே ஏரியாவில் வசித்து வந்தால் அவர்களிடம் சாப்பாடுக்கு பணம் கேட்கக்கூடாது என அவர்களே நினைத்துக்கொண்டு இதுபோன்ற அலம்பல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் கூட சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில் ஓசி ஃப்ரைடு ரைஸ் கேட்டு ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டு ஓட்டல் உரிமையாளர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அதுபோன்ற சம்பவம்தான் சேலத்தில் நடந்திருக்கிறது.
"சாப்பிடுவோம்.. பில் போடக்கூடாது"
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள செம்மாண்டப்பட்டப்பட்டியில் ராமகிருஷ்ணன் என்பவர் சிறிய ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த ஓட்டலுக்கு 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அவ்வப்போது வந்து சாப்பிடுவதும் பணம் கொடுக்காமல் செல்வதுமாக இருந்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், மது போதையில் அடிக்கடி வருவதாலும் 'எதுக்கு பிரச்சினை' என ஓட்டல் ஊழியர்களும் அவர்களிடம் எதுவும் கேட்காமல் இருந்துள்ளனர். இதனால் ஓட்டல் ஊழியர்கள் தங்களை கண்டு பயப்படுகிறார்கள் என நினைத்துக் கொண்டு, இவ்வாறு பணம் கொடுக்காமல் சாப்பிடுவதை அவர்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
பணம் கேட்டதால் ஆத்திரம்
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அந்த ஓட்டலில் அக்கும்பலைச் சேர்ந்த செல்வம் (23), மணி (24), கவுதம் (24) ஆகிய 3 பேர் சென்று சாப்பிட்டுள்ளனர். பின்னர் வழக்கம் போல அவர்கள் கைகழுவிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றனர். அப்போது ஓட்டல் ஊழியர் அவர்களை மறித்து, சாப்பிட்டதற்கு பணம் கொடுத்துவிட்டு செல்லுமாறு பில்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், எங்களிடமே சாப்பாடுக்கு பணம் கேட்கிறாயா எனக் கேட்டு அவரை சரமாரியாக தாக்கினர்.
ஓட்டல் சூறை - கைது
பின்னர் அங்கிருந்த மேஜை, நாற்காலி, உணவுப்பொருட்கள் என அனைத்தையும் அவர்கள் அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர். மேலும், அங்கிருந்த மற்ற ஊழியர்களையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கவுதம் என்பவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.