“அட தொறய்யா.. ஒரு வேலையும் செய்யாம மந்திரியா இருப்பியா?” சக அமைச்சரை கிண்டல் செய்த கே.என்.நேரு!
சேலம் : சேலத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சக அமைச்சரை கே.என்.நேரு கிண்டலாக சீண்டியது அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் சேலத்தில் நடைபெற்ற ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தபோது, அமைச்சர் அன்பரசனை கலாய்த்தார் அமைச்சர் கே.என்.நேரு. கண்காட்சியை நீங்களே தொடங்கி வைங்க என அமைச்சர் அன்பரசன், நேருவை பார்த்து சொன்னதால், ஒரு வேலையும் செய்யாம மந்திரியா இருப்பியா? என கிண்டலாக அதட்டி அவரையே கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறக்கச் செய்தார்.
வட சென்னையில் மழை நீர் தேங்கவில்லை.. அதற்குக் காரணம் இதுதான்..கே.என். நேரு
அமைச்சரின் இயல்பு
அமைச்சர் கே.என்.நேரு பொது இடங்களிலும் வெளிப்படையாக, சகஜமாக பேசக்கூடிய இயல்பு கொண்டவர். கட்சிக்காரர்களை ஒருமையில் அழைத்துப் பேசும் குணம் கொண்டவர். அதட்டலாகப் பேசும் அமைச்சர் கே.என்.நேருவின் இயல்பே சில சமயம் சர்ச்சைகளையும் ஏற்படுத்துவது உண்டு. சில வாரங்களுக்கு முன்பு கூட சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனை ஒருமையில் அதட்டலாக கே.என்.நேரு பேசும் வீடியோவை பகிர்ந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், அமைச்சர் நேரு எனக்கு அப்பா மாதிரி, உரிமையில் தான் பேசினார் என மேயர் பிரியா விளக்கம் அளித்தார்.
சேலத்தில் அமைச்சர்கள்
அமைச்சர் கே.என்.நேரு அமைச்சர்களிடமே கிண்டலாக கேலியாக பேசுபவர் என்பதால் திமுகவினர் அவர் அதட்டலாகப் பேசுவதை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. இந்நிலையில் தான் நேற்று சேலத்தில் சக அமைச்சரான தா.மோ.அன்பரசனையும் ஒருமையில் கிண்டலாக சீண்டியுள்ளார் அமைச்சர் கே.என்.நேரு. சேலம் மாவட்ட ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சரான நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்றது.
நீ தொறய்யா
இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். புகைப்படக் கண்காட்சி அரங்கின் முன்பு ரிப்பன் கட்டப்பட்டு, கத்தரிக்கோல் தயார் நிலையில் இருந்த நிலையில், கத்தரிக்கோலை எடுத்து அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் கொடுத்து "நீ கண்காட்சிய தொறய்யா.." என்றார் அமைச்சர் கே.என்.நேரு.
வேலையே செய்யாம மந்திரி
கத்தரிக்கோலை கையில் வாங்காமல் அமைச்சர் அன்பரசன், சீனியர் என்ற முறையில் அமைச்சர் கே.என்.நேருவையே திறந்து வைக்குமாறு கூறினார். அதற்கு அமைச்சர் நேரு சிரித்துக்கொண்டே, "அட தொறய்யா.. ஒரு வேலையும் செய்யாம மந்திரியா இருப்பியா?" என கிண்டலாக சீண்டி, அவரிடமே கத்தரிக்கோலை கொடுத்து, ரிப்பன் வெட்டி கண்காட்சியை திறக்கச் செய்தார். இந்நிகழ்வால் அங்கிருந்தோர் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
ஜெயிலுக்கு போயிருக்கேன்
பின்னர் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்திலும் ஜாலியாக பேசினார் அமைச்சர் கே.என்.நேரு. விவசாய சங்கத் தலைவர் ஒருவர் தமிழ்நாட்டில் ஜவ்வரிசி உற்பத்தி அதிகமாக இருந்தாலும் பயன்பாடு இங்கு மிகவும் குறைவுதான். தமிழ்நாட்டிலும் ஜவ்வரிசி பயன்பாட்டை அதிகரிக்க, சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு ஜவ்வரிசியை ஒரு வேளை உணவாக அளிக்கலாம்" என்றார். அதற்கு சட்டென பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, "யாரெல்லாம் ஜெயிலுக்குப் போறீங்களோ அவங்களுக்குத்தான் ஜவ்வரிசி சாப்பாடு கிடைக்கும். நானும் ஜெயிலுக்கு அப்பப்போ போயிருக்கேன்" என்றார். இதனால் அரங்கில் அனைவரும் வெடித்துச் சிரித்தனர்.