பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா! மாஜிஸ்திரேட்டிடம் வாயை விட்டு வாங்கிக் கொண்ட நர்சுகள்! என்னாச்சு?
சேலம் : சேலம் அருகே அரசு மருத்துவமனையில் வழக்கு ஒன்று தொடர்பாக வாக்குமூலம் பெறச் சென்ற மாஜிஸ்திரேட்டை, அங்கு பணியில் இருந்த நர்சுகள் கிண்டல் அடித்த விவகாரம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நீதித்துறை நடுவர்கள், குற்றவியல் நடுவர்கள் எனப்படும் மாஜிஸ்திரேட் பல முக்கியமான வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்து இருக்கின்றனர். மேலும் முக்கிய வழக்குகள், தற்கொலை போன்ற விவகாரங்கள் வாக்குமூலம் பெறுவதும் மேஜிஸ்ட்ரேட்டுகளின் நடவடிக்கையாக இருக்கிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே விவசாயி ஒருவரது மகள் குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதைஅடுத்து உறவினர்கள் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

நீதித்துறை நடுவர்
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி சிகிச்சை பெற்று வருவதால் அவரிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என்பது நடைமுறை. இதை அடுத்து அந்த சிறுமியிடம் வாக்குமூலம் பெறுவதற்காக சேலம் ஒன்றாவது நீதித்துறை நடுவர் அரசு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அவர் சென்றபோது சிறுமி சிகிச்சை பெற்ற வார்டில் மருத்துவர் இல்லை எனக் கூறப்படுகிறது.

செவிலியர்கள் கிண்டல்
இதனை தொடர்ந்து அங்கிருந்த செவிலியர்களிடம் மருத்துவர் எங்கே அவரை அழைத்து வாருங்கள் என கூறி இருக்கிறார். வந்திருப்பது நீதிபதி எனத் தெரியாத அந்த செவிலியர்கள் பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? என கவுண்டமணி டயலாக்கை நீதித்துறை நடுவரிடம் கேட்டு தங்களுக்குள்ளாக சிரித்துக் கொண்டுள்ளனர். இதனால் கடுமையான கோபம் அடைந்த நீதித்துறை நடுவர் இதனை வெளிக்காட்டி கொள்ளாமல் நேராக விஷம் குடித்த சிறுமியிடம் சென்று வாக்கு மூலத்தை பெற்றிருக்கிறார்.

புகார்
அதனை தொடர்ந்து நேராக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அலுவலகத்திற்கு சென்ற அவர் தான் வாக்குமூலம் பெறச் சென்றபோது பணியில் இருந்த செவிலியர்கள் தன்னிடம் மரியாதை குறைவாகவும் கிண்டலாகவும் பேசியதை புகாராக அளித்திருக்கிறார். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தான் மணி என்பவர் பதவியேற்றார். நீதித்துறை நடுவரின் குற்றச்சாட்டை அடுத்து செவிலியர்கள் இருவரையும் வரவழைத்து விசாரணை நடத்தி இருக்கிறார்.

மெமோ
இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் செவிலியர்கள் சங்க நிர்வாகிகளும் அங்கு விரைந்து வந்து செவிலியர்களுக்கு ஆதரவாக பேசி இருக்கின்றனர். விசாரணைக்கு பிறகு மாதிஸ்ட்ரேட்டிடம் பணியில் இருந்த இரு செவிலியர்கள் தாங்கள் யாரென்று தெரியாமல் பேசி விட்டோம் என மன்னிப்பு கேட்டுள்ளனர். இருந்த போதும் இருவரது நடவடிக்கை குறித்தும் உரிய விளக்கம் வேண்டும் என இரண்டு செவிலியர்களுக்கும் மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications