நிச்சயம் தட்டி கேட்போம்.. கேள்வி கேட்பவர்கள் தேச விரோதிகளா.. முக ஸ்டாலின் ஆவேசம்
சேலம்: கடன் வாங்கியவர்களை தப்பவிட்டவர்கள் தேசியவாதிகள், கேள்வி கேட்பவர்கள் தேசவிரோதிகளா என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
சேலம் கோட்டை மைதானத்தில் திராவிட கழகத்தின் 75ம் ஆண்டு விழாவையொட்டி பவளவிழா செவ்வாய்கிழமை இரவு நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசுகையில், 'திராவிட இயக்கத்தை வீழ்த்த நினைத்தவர்கள், வீழ்ந்துபோனார்கள். திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. முன்பை விட திராவிடர் கழகம் வேகமாக வளர்ந்து வருகிறது.
ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்கும் நம்மை தேச விரோதிகள், பிரிவினைவாதிகள் என்று சொல்கிறார்கள். மாநிலத்தையும், மாவட்டத்தையும் பிரிக்கும் அவர்கள் தான் பிரிவினைவாதிகள்.
கடன் வாங்கியவர்களை தப்பவிட்டவர்கள் தேசியவாதிகள், கேள்வி கேட்பவர்கள் தேசவிரோதிகளா? ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் நாங்கள் நிச்சயம் தட்டி கேட்போம்.
தமிழகத்தை மத்திய பாஜக அரசு பல்வேறு வகைகளில் பழிவாங்கி வருகிறது. இந்திய பொருளாதாரம் அதல பாதளத்தில் சென்று கொண்டிருக்கிறது. மோட்டார் வாகனத்துறை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வாகனங்கள் விற்பனை 31 சதவீதம் குறைந்துள்ளது.
இந்திய பொருளாதாரம் நிதிச் சிக்கலில் தவித்து வருகிறது. இதை மறைக்கவே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கைது போன்ற நடவடிக்கைகளை திட்டமிட்டு நடத்தி வருகிறது" என்றார்.