பணிநிரந்தரம் செய்ய கோரி போராட்டம்.. சேலத்தில் குவியும் செவிலியர்கள்.. பரபரக்கும் கலெக்டர் அலுவலகம்
சேலம்: பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பிற மாவட்டங்களில் இருந்து ஒப்பந்த செவிலியர்கள் சேலத்தில் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது.
இதனால், மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இதையடுத்து மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான கூடுதல் வசதிகளை தமிழக அரசு மேற்கொண்டது.

பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மாதம் ரூ. 14 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. தங்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும் அவர்களை பணி நிரந்தரம் செய்யும் வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

செவிலியர்கள் சங்கம் கண்டனம்
அரசியல் தலைவர்களும் ஒப்பந்த செவிலியர்களை பணியில் இருந்து நீக்கக்கூடாது என்று அறிக்கைகள் மூலம் வலியுறுத்தி வந்தனர். எனினும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்ட செவிலியர்ளுக்கு பணி நீட்டிப்பு வழங்க மறுத்த தமிழக அரசு அவர்களை பணியில் இருந்து நீக்கி அரசாணை பிறப்பித்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எம்ஆர்பி செவிலியர்கள் சங்கமும் கடும் கண்டனம் தெரிவித்தது.

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு
ஒப்பந்த பணியாளர்களை பணியில் இருந்து நீக்கியதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர்கள் 2,400 பேர் பணியில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டனர். பணியில் இருந்து நீக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு போரட்டத்தை ஒப்பந்த செவிலியர்கள் தொடங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தும் ஒப்பந்த செவிலியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க சேலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

போராட்டம் தொடரும் என அறிவிப்பு
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களிடம் போலீசாரும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் நளினியும் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், இந்த பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. மீண்டும் நிரந்தர ஒப்பந்த பணி வழங்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள ஒப்பந்த செவிலியர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

10 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர்
முன்னதாக ஒப்பந்த செவிலியர்களுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்படாதது குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிர்மணியன், "தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா காலத்தின் போது 8 ஆயிரம் பணியிடங்கள்தான் நிரப்ப வேண்டிய தேவை இருந்தது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நியமனம் செய்யப்படனர்.

படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவர்
நீதிமன்ற உத்தரவின் படி இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் பணியில் சேர்க்கப்பட்டவர்களை பணி நிரந்தரம் செய்ய இயலாது. கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களை கைவிடக்கூடாது என்பதற்காக 2,300 பேரையும் இந்தப் பணியில் இருந்து விடுவித்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருக்கும் இடங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர். எனவே அவர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications