மின்சார வேலியால் பலியான காட்டு யானை... மேட்டூர் வனத்துறையினர் விசாரணை!
சேலம் : சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, மின்வேலியில் சிக்கி ஆண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
மலை காடுகளில் சுற்றித்திரியும் காட்டு யானைகள் உணவுக்காக மலையில் இருந்து கீழ் இறங்கும் போது, ரயில், அகண்ட பள்ளம், மின்சார வேலி, போன்றவற்றால் சிக்கி பலியாவது தொடர்கதையாகி வருகிறது. யானைகள் இல்லாத காட்டை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று சுற்றுச்சூழலியலாளர்கள் கூறி வந்தபோதிலும், ஒவ்வொரு முறையும் மனிதர்களால் யானைகள் பலியாவது அரங்கேறிதான் வருகிறது. அப்படியொரு துயரச் சம்பவம், மேட்டூர் அருகே நிகழ்ந்துள்ளது.
மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதி அருகேயுள்ள ஆலமரத்துபட்டி கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால், இங்குள்ள விவசாய தோட்டத்திற்குள் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. பல லட்ச ரூபாய் கடன் வாங்கி பயிர்செய்த பயிர்களை, யானை, பன்றி உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள பெரும்பாலான விவசாயிகள், அரசின் கடும் எச்சரிக்கையும் மீறி, வேலியில் மின்சாரம் வைப்பது வாடிக்கையாகி விட்டது.
இதே பாணியை, அந்தப் பகுதியை சேர்ந்த விவசாயி புஷ்பநாதன் என்பவரும் செய்துள்ளார். அதவாது, தனது விவசாய நிலத்தில் வன விலங்குகள் புகுந்து சேதம் விளைவிப்பதை தடுக்க வகையில், விவசாய நிலத்தைச் சுற்றி கம்பி கட்டி அதில் சட்ட விரோதமாக மின் இணைப்பு அமைத்திருந்தார்.
மனிதர்களின் இந்த குறுக்குப் புத்தியை அறியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, நேற்று இரவு சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட வடபருகூர் வனப்பகுதியில் இருந்து வந்துள்ளது. எதிர்பாராத விதமாக புஷ்பநாதன் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியை மிதித்தால் மின்சாரம் தாக்கி அந்த வாயில்லா ஜீவன் பரிதாபமாக உயிரிழந்தது.
இது தொடர்பாக தகவலின்பேரில், மேட்டூர் வனச்சரக அலுவலர் அறிவழகன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்த யானையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, வனத்துறை மருத்துவர்கள் மூலம் யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த புஷ்பநாதன் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கால்நடை மருத்துவர்கள் யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டதும், யானையை அடக்கம் செய்யும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மின்வெளியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 கிமீ தூரம்.. கங்கையின் பெருவெள்ளத்தில் மிதந்து.. பாகனை காத்த கம்பீர யானை.. சிலிர்க்க வைத்த வீடியோ!