“அவன்லாம்”.. முதல்வர், அமைச்சர்களை ஒருமையில் பேசி ‘பர்சனல்’ அட்டாக் செய்த மாஜி அமைச்சர்! பரபரப்பு!
சிவகங்கை : அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், திமுக அமைச்சர்களையும், முதல்வர் ஸ்டாலினையும் ஒருமையில் விளித்து, கடுமையாக தாக்கிப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்ட அதிமுக சார்பில், சிவகங்கை நகர் அரண்மனை வாயில் முன்பாக அதிமுகவின் 51ஆம் ஆண்டு தொடக்க பொன்விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன், அதிமுகவில் இருந்து திமுக சென்று தற்போது அமைச்சர்களாக இருப்பவர்களை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
கோவில் நிலத்தில்.. அதிமுக மாஜி அமைச்சர் பாஸ்கரன் உறவினர்கள் கட்டிய காம்ப்ளக்ஸ்.. இடித்து தள்ளிய அரசு
ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தார்
சிவகங்கையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசும்போது, "இங்கிருந்து போனவர்கள் இருக்கிறார்களே அவர்கள் நம்மையே திட்டுகிறார்கள். அவர்கள் குடும்பம் எப்படி நல்லா இருக்கும்? அமைச்சர் ராஜகண்ணப்பன், ஜெயலலிதாவிடம் இருந்தார். அவருக்கு துரோகம் செய்து, மோசடி செய்து தான் கோடீஸ்வரர் ஆனார். அந்த நன்றியை மறந்து ஜெயலலிதாவின் அதிமுகவையே விமர்சிக்கிறார்.
கழற்றிவிட்டு விடுவார்கள்
தி.மு.க ஆட்சியில் ராஜகண்ணப்பனுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி கொடுத்தனர். ஆனால் அவரது நடவடிக்கையால் அதை பறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை வழங்கினர். நடந்துகொள்ளும் விதம் அப்படி. ஸ்டாலின் குடும்பத்திற்கு கப்பம் கட்டுவதால் தான் பதவியில் நீடிக்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் ராஜகண்ணப்பனை அமைச்சரவையில் இருந்தே கழற்றி விட்டு விடுவார்கள். நீடிக்காது.
உண்ட வீட்டுக்கு வஞ்சகம்
அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது கண்டக்டர், டிரைவர் நியமனத்தில் வசூல் செய்துள்ளார். அவர் மீது நீதிமன்ற வழக்கு நீடிப்பதால் அவர் அமைச்சராக தொடர்ந்து இருக்க முடியாது. அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்ற அமைச்சர்கள் தான் அதிமுகவை விமர்சிக்கின்றனர். உண்ட வீட்டுக்கு வஞ்சகம் நினைக்கலாமா?
உருப்படவே முடியாது
அடுத்து கே.கே.எஸ்.எஸ்.ஆர்.. அவரெல்லாம் யாரு? முத்துச்சாமி எல்லாம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்து சம்பாதித்தவர்கள். இந்த சிவகங்கை சீமையில் இருந்து சொல்றேன். வேலு நாச்சியார், குயிலி வாழ்ந்த பூமியில் இருந்து சொல்றோம். இவர்கள் எல்லாம் உருப்படவே முடியாது." என கடுமையாக அமைச்சர்களை விமர்சித்தார். (அவர் ஒருமையில் விளித்த சொற்கள் இங்கே மாற்றப்பட்டுள்ளன.)
தனிப்பட்ட முறையில் தாக்குதல்
மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் பற்றியும் தனிப்பட்ட முறையில் கடுமையாகத் தாக்கிப் பேசினார் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன். முதல்வர் ஸ்டாலினின் கடவுள் மறுப்பு கொள்கை பற்றி அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் விமர்சித்துப் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீட் இல்லை
கடந்த அதிமுக ஆட்சியில் காதி மற்றும் கதர் கிராமத் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் பாஸ்கரன். முன்னர், சிவகங்கை ஒன்றிய சேர்மனாக இருந்த இவர், கடந்த 2016ல் சிவகங்கை தொகுதியில் வென்று எம்.எல்.ஏ ஆன நிலையில் முதல்முறையாக அமைச்சரவையில் இடம்பெற்றார். அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில் பாஸ்கரன் உள்ளிட்ட 3 பேருக்கு மட்டுமே கடந்த 2021ல் மீண்டும் சீட் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.