ஜாலியா ஆடலாம்.. ஊஞ்சல் ஆட்டி விட்ட முதல்வர் ஸ்டாலின்..குஷியான சிறுவர்கள்
சிவகங்கை: சிங்கம்புணரி அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோட்டை வேங்கைபட்டியில் 100 வீடுகள், அங்கன்வாடி மையம், நியாயவிலைக்கடை, பூங்கா உள்ளிட்டவை என சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் சகல வசதியுடன் கூடிய சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த விளையாட்டு திடலில் ஊஞ்சலை ஆட்டி விட்டு சிறுவர்களை உற்சாகப்படுத்தினார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே பணிகள் நிறைவு பெற்ற நிலையில், ஆட்சி மாற்றத்தின் காரணமாக பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மீண்டும் புதுப்பிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், இன்று சமத்துவபுரத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Recommended Video
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோட்டை வேங்கைபட்டியில் ரூ.2.92 கோடியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. இங்கு 100 வீடுகள், ஆரம்ப சுகாதார நிலையம், ரேசன்கடை உள்ளிட்ட கட்டிடங்களும், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, தெரு விளக்குகள், தார்சாலை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சமத்துவபுரத்தின் திறப்புவிழா இன்று நடைபெற்றது. சமத்துவபுரத்தின் முன் பகுதியின் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறுவர் பூங்கா, அங்கன்வாடி மையம், விளையாட்டுமைதானம், ரேசன்கடை, முன்னாள் அமைச்சர் கே. மாதவன் நினைவு நூலகம் உள்ளிட்டவைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சிறுவர்கள் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த போது ஊஞ்சலை ஆட்டி விட்டு உற்சாகப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது சிறுவர்கள் குஷியாக விளையாடினர். இதனையடுத்து பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கினார். வீடுகளை பெற்ற பயனாளிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் அருகே உள்ள காரையூருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ஏற்கனவே நிறைவு பெற்ற ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.