சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - மரத்தின் மீது தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஜமீன்சல்வார்பட்டி என்ற ஊரில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். வெடி விபத்தில் அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. தூக்கி வீசப்பட்ட தொழிலாளி மரத்தில் தொங்கியபடி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. கொரோனா லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஒருமாத காலமாக பட்டாசு ஆலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. கடந்த 6 மாத காலத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் வெடி விபத்தில் உயிரிழந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் அச்சங்குளத்தில் நிகழ்ந்த மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் ஜமீன் சல்வார்பட்டி என்ற ஊரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடிமருந்து கலவை செய்யும் அறையில் உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அந்த அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளி தூக்கி வீசப்பட்டார் அவரது உடல் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த தொழிலாளியின் உடலை போராடி மீட்டனர். சம்பவ இடத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் பட்டாசு ஆலைகள் விறுவிறுப்பாக இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுவதால் தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications