தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ஜூலை 7 வரை காவல்... இலங்கை கடற்படை அட்டூழியம்
இலங்கை கடலோரக் காவல் படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 8 பேரையும் ஜூலை 7-ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்கள் வரும் ஜூலை 7-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க காங்கேசன் துறைமுக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து சில நாள்கள்தான் ஆகின்றன. இந்நிலையில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

நாகை அக்கறைப் பேட்டையை சேர்ந்த வடிவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் செல்வம், சங்கர், செந்தில், ராஜசேகர், முகேஷ், ரமேஷ், சக்திவேல் மற்றும் கல்லார் பகுதியை சேர்ந்த ஒரு மீனவர் உள்பட 8 பேர் கடந்த 20-ஆம் தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர்.
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென் கிழக்கே ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தனர். அப்போது அவர்கள் இந்திய எல்லையை தாண்டி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு 10 மணி அளவில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லையை தாண்டியதாக அவர்களை சிறைப்பிடித்து இலங்கை காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் ஜூலை 7-ம் தேதிவரை சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த 8 பேரையும் சேர்த்து எல்லை கடந்துவந்து மீன் பிடித்ததாக இலங்கை கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications