ராணுவம் மூலம் கள்ள ஓட்டு போட திட்டம் – ராஜபக்சே மீது ரனில் விக்ரமசிக்கே குற்றச்சாட்டு
கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ராணுவம் மூலம் கள்ள ஓட்டு போட ராஜபக்சே சதி திட்டம் வகுத்துள்ளதாக முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவருமான ரனில் விக்ரம சிங்கே குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையில் வரும் 8ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில், தற்போதைய அதிபர் ராஜபக்சே 3 ஆவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மைத்ரிபால சிறிசேன போட்டியிடுகின்றார்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இலங்கையில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் கொழும்பில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவருமான ரனில் விக்ரமசிங்கே, "வர இருக்கும் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.
ஆனால் அதிபர் ராஜபக்சே கள்ள ஓட்டுக்கள் மூலம் தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளார். தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவம் மூலம் கள்ள ஓட்டு போட திட்டம் வகுத்துள்ளனர். அங்கு சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை.
இந்த தகவல் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மற்றும், பயிற்சி ராணுவ வீரர்கள் மூலம் கிடைத்துள்ளது" என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications