இலங்கை: தமிழர் பகுதியில் கும்பாபிஷேகம் நடைபெற இருந்த கோவில் சிலைகள் உடைப்பு- பெரும் பதற்றம்
அக்கரபத்தனை: இலங்கையின் அக்கரப்பத்தனை பகுதியில் தமிழர்கள் வழிபாடு நடத்தி வந்த கும்பாபிஷேகம் நடைபெற இருந்த விநாயகர் கோவில் சிலைகளை மர்ம நபர்கள் உடைத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் கோவில் சிலைகளை உடைப்பது தொடர் கதையாகி வருகிறது. அண்மையில் லிந்துலை என்ற இடத்தில் தேவாலயத்தில் மாதா சிலைகள் உடைக்கப்பட்டிருந்தன.

தற்போது அக்கரப்பத்தனை பகுதியில் விநாயகர் கோவில் சிலைகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இந்த சித்தி விநாயகர் ஆலயம் சீரமைக்கப்பட்டு ஜனவரி 19-ந் தேதி முதல் ஜனவரி 24-ந் தேதி வரை கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தற்போது கோவிலின் வெளிபிரகாரத்தில் பூச்சு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலைகளை உடைத்து எறிந்துள்ளனர். இந்த தகவலை அறிந்த பொதுமக்கள் கோவில் முன்பாக ஒன்று திரண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தினர், மத மோதல்களை ஏற்படுத்தவே விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் கும்பாபிஷேகம் நடத்துவதில் குழப்பம் ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு இதனை செய்திருக்கின்றனர். இந்த செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications