தமிழக மீனவர்களின் 87 படகுகள் இன்று விடுதலை- இலங்கை அதிபரின் இந்திய வருகையால் அறிவிப்பு
கொழும்பு: இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற தமிழக மீனவர்களின் படகுகளை இன்று விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. மீனவர்களின் படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 87 படகுகளை இன்று விடுவிக்க இலங்கை அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இந்திய வருகையையொட்டி, அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் தமிழகப் பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையும், படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றனர். சில மாதங்களுக்குப் பின்னர் மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர். படகுகள் விடுவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா வருகிற 15 ஆம் தேதி இந்தியா வருகிறார். இதையொட்டி, இலங்கை அரசு தமிழக மீனவர்களின் 87 படகுகளை விடுவித்து உத்தரவிட்டது.
இலங்கை அரசின் அட்டர்னி ஜெனரல் உத்தரவின்படி, அரசின் உத்தரவு நகலை இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம், திரிகோணமலை, பருத்தித்துறை, மல்லாகம், மன்னார் ஆகிய நீதிமன்றங்களில் அதிகாரிகள் இன்று சமர்ப்பிக்க உள்ளனர்.
இந்தப் படகுகளை நீதிமன்றங்கள் விடுவித்தவுடன், மத்திய அரசின் அனுமதியோடு அவற்றை பெற்றுக் கொள்ள தமிழக மீனவர்கள் அங்கு செல்வார்கள் என இந்திய, இலங்கை இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை குழுத் தலைவர் தேவதாஸ் நேற்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications