"கெரகத்துக்கு"க் கோவில் கொட்டும் இலங்கை தொழிலதிபர்!
கொழும்பு: இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு கோவில் கட்ட உள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அந்நாட்டின் முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சேவுக்கு கோவில் கட்ட முடிவு செய்துள்ளார். ராஜபக்சேவுக்கு கோவில் கட்ட காரணங்கள் உள்ளதாம்.
இது குறித்து அந்த தொழில் அதிபர் கூறுகையில்,
என் இரண்டு மகன்களும் ராணுவத்தில் சேர்ந்தனர். அதில் என் மூத்த மகன் எதிரிகளுடன் போராடுகையில் கொல்லப்பட்டான். இலங்கையில் நடந்த போரை ராஜபக்சே முடிவுக்கு கொண்டு வந்தார். அதனால் என் இரண்டாவது மகன் உயிருடன் உள்ளான்.
நாட்டிற்காக சேவை செய்த அரசர்களுக்கு கோவில் கட்டியுள்ளனர். அதே போன்று இலங்கைக்கு சேவை செய்த ராஜபக்சேவுக்கு நான் கோவில் கட்ட உள்ளேன். கோவில் கட்டத் தேவையான இடத்தை கொழும்பு மற்றும் கண்டியில் தேடிக் கொண்டிருக்கிறேன்.
உலகமே வியக்கும் வகையில் தீவிரவாதத்தை தோற்கடித்து இலங்கைக்கு ராஜபக்சே சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். அந்த வீர கதையை அவருக்கு கட்டப்படும் கோவிலில் கல்வெட்டாக பதிப்பேன். நாட்டை காப்பாற்றிய தலைவர் என்று தான் ராஜபக்சேவை இலங்கை மக்கள் அறிய வேண்டும் என்றார்.