எதிர்க்கட்சிகள் புகார்.. ஆர்.கே.நகரில் அதிக அளவில் துணை ராணுவத்தினை களமிறக்க தேர்தல் ஆணையம் முடிவு
ஆர்.கே.நகர் இடைதேர்தலுக்கு துணை ராணுவம் பெருமளவில் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை: எதிர்க்கட்சிகளின் புகாரினை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிக அளவில் துணை ராணுவத்தினை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 11 நாட்கள் உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தன. இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டுள்ளது.
அதன்படி 3 கம்பெனி துணை ராணுவப்படை ஏற்கனவே சென்னைக்கு வந்துள்ளது. இந்நிலையில், கூடுதலாக துணை ராணுவ படைகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து ஆர்.கே. நகர் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 7 கம்பெனி துணை ராணுவத்தினர் 2 நாட்களில் சென்னைக்கு வரவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.