மாயமான மலேசிய விமானமும், உக்ரைனில் சுடப்பட்ட விமானமும் ஒரே ரகத்தைச் சேர்ந்தது என தெரியுமா?
சென்னை: முதன்முதலாக 1997ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி சேவையை துவங்கிய மலேசிய விமானம் 17 ஆண்டுகள் கழித்து அதே ஜூலை 17ம் தேதி சுட்டுத்தள்ளப்பட்டுள்ளது.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு வியாழக்கிழமை மதியம் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 கிழக்கு உக்ரைனில் ரஷ்யா எல்லை அருகே பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேரும் பலியாகினர்.
இந்நிலையில் விமானம் குறித்த சில தகவல்களை பார்ப்போம்.
போயிங்
கடந்த மார்ச் மாதம் 239 பேருடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மற்றும் உக்ரைனில் சுட்டுத் தள்ளப்பட்ட எம்.ஹெச். 17 ஆகிய இரண்டுமே போயிங் 777-200 இஆர் ரகத்தைச் சேர்ந்தவை.
17 ஆண்டுகள்
எம்.ஹெச். 17 விமானம் 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. விமானம் முதன்முதலாக 1997ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி சேவையை துவங்கியது. 17 ஆண்டுகள் கழித்து அதே ஜூலை 17ம் தேதி சுட்டுத்தள்ளப்பட்டுள்ளது.
தொடர்பு
விமானம் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஷிபோல் விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு கிளம்பியது. ஆம்ஸ்டர்டாமில் இருந்து 12.15 மணிக்கு கிளம்பிய விமானத்தை 4 மணிநேரம் கழித்து தொடர்புகொள்ள முடியாமல் போனது.
33 ஆயிரம் அடி உயரம்
உக்ரைனில் சண்டை நடப்பதால் 32 ஆயிரம் அடிக்கு கீழ் விமானங்கள் பறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மலேசிய விமானம் உக்ரைன் எல்லைக்குள் நுழைந்ததும் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துள்ளது.
பயணிகள்
நெதர்லாந்தைச் சேர்ந்த 154 பேர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 27 பேர், மலேசியாவைச் சேர்ந்த 23 பேர், இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேர், இங்கிலாந்தைச் சேர்ந்த 6 பேர், ஜெர்மனியைச் சேர்ந்த 4 பேர், பெல்ஜியத்தைச் சேர்ந்த 4 பேர், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 3 பேர் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒருவர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
ரஷ்யா
விமானம் ராடாரில் இருந்து மறைந்தபோது ரஷ்ய எல்லைக்குள் நுழைகின்ற போது ரஷ்யாவில் இருந்து 50 கிமீ தூரத்தில் தான் சுட்டுத் தள்ளப்பட்டது.
பக் ஏவுகணை
விமானம் ரஷ்யாவில் தயாரித்த பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பக் ஏவுகணை 72 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இலக்கை தாக்கும் சக்தி கொண்டது.
பழிபோடுதல்
ரஷ்ய ராணுவ ஆதரவு தீவிரவாதிகள் விமானத்தை சுட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் உக்ரைன் சுட்டதாக தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
தவறுதலாக
உக்ரைன் விமானம் என்று நினைத்து ரஷ்ய ஆதரவு தீவிரவாதிகளோ அல்லது ரஷ்ய விமானம் என்று நினைத்து உக்ரைனோ சுட்டுத்தள்ளியிருக்க வேண்டும்.
பத்திரிக்கையாளர்
விமானம் விபத்துக்குள்ளானதாக உக்ரைன் அதிகாரிகள் அறிவித்தனர். ரஷ்ய எல்லையில் இருந்து 40 கிமீ தொலைவில் ரஷ்ய தீவிரவாதிகள் பிடியில் உள்ள கிராமம் அருகே விமானம் விழுந்து நொறுங்கிக் கிடந்ததை பத்திரிக்கையாளர் ஒருவர் தான் முதலில் பார்த்துள்ளார்.