பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கர்ப்பம்: கருவைக் கலைக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: பக்கத்து வீட்டுகாரர் மூலம் பலாத்காரம் செய்யப்பட்டதால் கர்ப்பமடைந்த சிறுமியின் வயிற்றில் இருக்கும் கருவைக் கலைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘' எங்கள் ஊர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தபோது, கோயில் கல்வெட்டில் பெயர் சேர்க்கவில்லை எனக் கூறி சசிகுமார் என்பவர் என்னிடம் தகராறு செய்தார். தகராறின் போது என்னை பழிவாங்குவதாகக் கூறிச் சென்றார்.
இந்த நிலையில், 9ஆம் வகுப்பு படிக்கும் எனது 15 வயது மகளை கடந்த டிசம்பர் மாதம் சசிகுமார் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில், எனது மகள் கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எனது மகளின் கருவை கலைக்குமாறு அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் கோரினேன். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். மேலும், நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற்று வரவும் அறிவுறுத்தினர். எனவே, எனது மகளின் கருவைக் கலைக்க அரசு டாக்டருக்கு உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கோரப்பட்டது.
நீதிபதி உத்தரவு
இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் என்.பொன்ராஜ் ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,
''மனுதாரரின் மகள், 13 வாரம் கருவுற்று இருப்பதாகவும், கருவைக் கலைப்பதற்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கருக் கலைப்பு சட்டத்தின்படி, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்து, அரசு டாக்டர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், அந்தக் கருவை டாக்டர்கள் சட்டப்படி பாதுகாத்து வைக்க வேண்டும்'' என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.