”இன்னொரு கப் கிடைக்குமா?” - மயிலாப்பூர் ”டிகிரி” காப்பியை சப்புக் கொட்டிக் குடித்த அமெரிக்க தூதர்
சென்னை: இந்தியாவின் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள ரிச்சர்ட் ஆர்.வர்மா நேற்று சென்னையில் ஒரு குட்டி சுற்றுப்பயணம் மேற்கொண்டதுடன் மயிலை கற்பகாம்பாள் மெஸ் டிகிரி காப்பியையும் சப்புக் கொட்டி ரசித்துக் குடித்தார்.
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்தியாவிற்கான அமெரிக்க தூதரான ரிச்சர்ட் வர்மா சென்னை ஐ.ஐ.டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
பின்னர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அவருடன் சென்னையில் உள்ள துணைத் துாதர் பிலிப் மின்னும் சென்றார். அங்கு 20 நிமிடம் இருந்த அவருக்கு கோவில் தல வரலாறு பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
அதன்பிறகு, அருகில் உள்ள கற்பகாம்பாள் உணவகத்துக்குச் சென்று "டிகிரி" காபியை ரசித்து குடித்தார். அதை தயாரிக்கும் விதம் குறித்து உரிமையாளர் பிரபுவிடம் கேட்டு அறிந்து கொண்ட அவர் அடுத்த முறை வரும்போது, அடை அவியல், பாதாம் அல்வா ஆகியவற்றை சாப்பிட விரும்புவதாக கூறினார்.
முதலாவதாக சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்தை பார்வையிட்டு அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர், உலக அளவில் பொருளாதாரம், அரசியல், அணுகுமுறை வியூகங்களில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி தற்போது ஐந்து மத்திய ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான "இஸ்ரோ" ஐந்து பிரிட்டன் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி உள்ளது. இந்தியா தற்போது பிராந்திய வல்லரசாக மட்டும் இன்றி, சர்வதேச வல்லரசாகவும் வளர்ந்துள்ளது. சமீபத்தில் ஏமன் நாட்டில் போரில் சிக்கி இருந்த அமெரிக்கர்களை மீட்க இந்தியாவின் உதவியைத் தான் நாடினோம். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்கவும், பாரீசில் நடைபெற உள்ள வெப்பநிலை தொடர்பான மாநாட்டிலும் இந்தியா முன்னிலை வகிக்கவும் அமெரிக்கா துணைநிற்கும்.
இந்தியாவுடன் அமெரிக்காவின் உறவு மிகவும் வலுப்பெற்று உள்ளது. பாதுகாப்பு, மீட்பு உள்ளிட்ட சர்வதேச பணிகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும். இந்தியாவும், அமெரிக்காவும் கொள்கை, கோட்பாடு ஆகியவற்றில் இயல்பிலேயே நண்பர்கள். உலகின் இரு பெரு ஜனநாயக நாடுகள் உலக அளவில் அமைதியும், வளத்தையும் கொண்டுவர முடியும்" என்று கூறினார்.
முன்னதாக, மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா விமானம், தடைகளைக் கடந்து செல்லும் "ரோபோ", ரோபோ பூச்சி ஆகியவற்றைப் பார்வையிட்டு அவர் வியந்து பாராட்டினார்.