கரூர் நெடுஞ்சாலையில் ரூ.1600 கோடி பணத்துடன் நின்ற 2 லாரிகள்..பழுது பார்க்கப்பட்ட பின்னர் கிளம்பியது!
கரூர்: கரூர் நெடுஞ்சாலையில் ரூ.1600 கோடியுடன் 2 லாரிகள் நிற்பது பற்றி போலீஸ் நடத்திய விசாரணையில் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான பணத்தை எடுத்து செல்லும் போது லாரி பழுதாகி நின்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பழது சரிசெய்யப்பட்ட பின்னர் இரண்டு கண்டெய்னர் லாரியும் திருவனந்தபுரம் அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு பல கோடி ரூபாய் நோட்டுகள் புதியதாக அச்சடிக்கப்பட்டு 2 கண்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வழியில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தாரக்கொட்டாய் என்ற பகுதியில் லாரிகள் வந்த போது, ஒருலாரியில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து ஒரு லாரி நிறுத்தப்பட்டது. மற்றொரு லாரியும் நிறுத்தப்பட்டது.
கரூர் நெடுஞ்சாலையில் ரூ.1600 கோடியுடன் 2 லாரிகள் நிற்பது பற்றி போலீஸ் விசாரணை நடத்தினர். பணத்தை பாதுகாக்க லாரியை சுற்றி துப்பாக்கியுடன் போலீசார் பாதுகாப்பு நின்றனர். இதுபற்றி தகவலறிந்த மாவட்ட எஸ்.பி., வந்திதா பாண்டே, டி.எஸ்.பி., கீதாஞ்சலி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். லாரியில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கட்டுகள் உள்ளதாகவும், பணத்திற்கு உரிய ஆவணங்கள் உள்ளதாகவும் கூறினர்.
திருப்பூர் அருகே 3 கண்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பிடிபட்ட சம்பவம் பற்றி சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது ரூ. 1600 கோடி ருபாய் பணத்துடன் கரூர் அருகே லாரிகள் நிற்று கொண்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர்-அரவக்குறிச்சி இடையே நிற்கும் பண லாரியை பார்க்க மக்கள் ஆர்வத்துடன் வருவதால் போலீஸ் பாதுகாப்பும் அதிகப்படுத்தப்பட்டது. இதையடுத்து மதுரையில் இருந்து உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு லாரியின் இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டது. பின்னர் இரண்டு லாரிகளும் திருவனந்தபுரத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது.