தூத்துக்குடியில் பரவும் டெங்கு - 24 பேர் பாதிப்பு என டீன் ஓப்புதலால் மக்கள் பீதி
தூத்துக்குடி மாவட்டத்தில் 24 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக டீன் கூறியிருப்பது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 24 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக மருத்துவமனை டீன் கூறியிருப்பது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி டீன் சாந்தகுமார் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வெகுவாக குறைந்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். இவர்களில் இருவர் மட்டுமே உயிர் இழந்துள்ளனர். இவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கடைசி கட்டமாகதான் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 21 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
இன்று 5ம் தேதி கொசு ஓழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலையில் அந்தந்த பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மருத்துவமனை தலைவரே டீனே டெங்கு காய்ச்சல் இருப்பதாக ஒப்புக் கொண்டதால் மக்கள் பயத்தில் உள்ளனர்.