2ஜி, 3ஜி ஊழல் செய்தவர்கள் தமிழகத்தில் உள்ளனர்: கன்னியாகுமரியில் மோடி 'பொளேர்'
குமரி: கடந்த கால ஊழல்களை பதவிக்கு வந்த 2 ஆண்டுகளில் வெளிக்கொண்டு வந்துள்ளோம். 2ஜி, 3ஜி ஊழல் செய்தவர்கள் தமிழகத்தில் உள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக குட்டி கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை சென்னை, ஓசூரில் பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் அவர் இன்று கன்னியாகுமாரியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். குமரி மாவட்டத்தில் போட்டியிடும் 6 பாஜக வேட்பாளர்கள், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் என மொத்தம் 17 பேருக்கு ஆதாரவாக அவர் பேசினார்.
மேடையில் அவர் பேசியதாவது,
கன்னியாகுமரி மக்களை கண்டதில் மகிழ்ச்சி. உறுதி அளித்தது போன்று குளச்சலில் துறைமுகம் அமைக்கும் பணிகளை மத்திய அரசு துவங்கியுள்ளது. ரூ.21,000 கோடி செலவில் மிகப்பெரிய குளச்சல் துறைமுகம் திட்டம் வந்துள்ளது.
குளச்சல் துறைமுகத்தால் மீன்வர்கள் மற்றும் மக்களுக்கு அதிக பலன் கிடைக்கும். குமரி மாவட்ட இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.
குமரி முதல் திருவனந்தபுரம் விமான நிலையம் வரை அகன்ற சாலை போடப்பட்டுள்ளது. குமரியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த சாலை வசதிகள் செய்து கொடுத்துள்ளோம். முன்னேற்றம் தான் நம் பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு.
வெள்ளத்தால் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டபோது மத்திய அரசு உடனே உதவி செய்தது. தேர்தலுக்காக மட்டும் ஏழை மக்களுக்கு பாஜக அரசு உதவி செய்யவில்லை. தாலிபான்களால் தமிழக பாதிரியார் பிரேம் கடத்தப்பட்டபோது அவரை மத்திய அரசு பத்திரமாக மீட்டது.
கடந்த கால ஊழல்களை பதவிக்கு வந்த 2 ஆண்டுகளில் வெளிக்கொண்டு வந்துள்ளோம். 2ஜி, 3ஜி ஊழல் செய்தவர்கள் தமிழகத்தில் உள்ளனர். மும்பையில் கொத்தடிமைகளாக இருந்த தமிழக, கேரள பெண்களை மீட்டது மத்திய அரசு தான்.
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியபோது அவர்களை மத்திய அரசு காப்பாற்றி அழைத்து வந்தது. ரூ.27 மதிப்பிலான அரிசியை இங்குள்ள ஏழை மக்களுக்கு ரூ.1க்கு மத்திய அரசு வழங்கியது. உங்கள் அரிசியில் என் படம் இல்லை. ஆனால் உங்களின் பசியை தீர்த்த நிம்மதி உள்ளது.
அடுப்பில் இருந்து வரும் புகை 400 சிகரெட் பிடிப்பதற்கு சமம். புகையில் இருந்து பெண்களை காப்பாற்ற 3 கோடி இலவச கேஸ் அளிக்கப்பட்டுள்ளது. 5 கோடி இலவச கேஸ் இணைப்பு கொடுப்பது எங்கள் இலக்கு என்றார்.