தென்காசி அருகே மாட்டு வியாபாரி வைத்திருந்த ரூ. 3.80 லட்சம் பறிமுதல்
திருநெல்வேலி: கேரளா மாட்டு வியாபாரியிடம் இருந்து ரூ. 3.80 லட்சம் ரூபாய் பணத்தை தென்காசி அருகே தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சட்டசபைத் தேர்தல் மே 16ம்தேதி நடைபெறுகிறது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழகம் முழுவதும் சோதனைகள் நடத்தி முறையாக கணக்கு இல்லாமல் கொண்டுவரப்படும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். இதுவரை 15 கோடிரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தென்காசி சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை தேர்தல் பறக்கும்படை தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் அதிகாரிகள் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். இலஞ்சி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியே கேரளாநோக்கி சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கொல்லத்தை சேர்ந்த மாட்டு வியாபாரி நிஜாமுதீன் என்பவர் இருந்தார்.

அவரிடம் சோதனை செய்தபோது ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. அந்த பணத்துக்கு நிஜாமுதீனிடம் முறையான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அந்த பணத்தை அதிகாரிகள் குழுவினர் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.பின்னர் இந்த பணம் தென்காசி அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications