500 ரூபாயை ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட கும்பல்...
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 500 ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டு தயாரித்துப் புழக்கத்தில் விட்ட ஒரு கும்பலைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் கோணம் தொல்லவிளையைச் சேர்ந்தவர் சுரேஷ் (39). இவர் புன்னைநகர் பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பார்வதிபுரம் பிராமணர் தெருவைச் சேர்ந்த சுஜின் (25), தாழக்குடி சந்தைவிளையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (24) ஆகிய 2 பேரும் சென்றனர். அவர்கள் 500 ரூபாயை சுரேஷிடம் கொடுத்து பழம் கேட்டுள்ளனர். ரூபாய் நோட்டை வாங்கிப் பார்த்த சுரேசுக்கு அந்த ரூபாய் தாள் கள்ளநோட்டாக இருக்கலாம் என்று சந்தேகம் வந்தது.
இதையடுத்து போலீஸாருக்கு அவர் போனைப் போட்டார். போலீஸார் விரைந்து வந்து இருவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு விசாரணை நடத்தியபோது அவர்கள் கொண்டு வந்த கொடுத்த 500 ரூபாய் நோட்டு ஜெராக்ஸ் மூலம் பிரதி எடுக்கப்பட்ட நோட்டு என்று தெரிய வந்தது.
இந்த சுஜின் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய நண்பர்தான் சுரேஷ்குமார். சுஜின் வேர்கிளம்பி பகுதியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் முன்பு வேலை பார்த்தார். அப்போது கலர் ஜெராக்ஸ் குறித்துத் தெரிந்து கொண்டார்.
பின்னர் அதை வைத்துக் கொண்டு, 500 ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து அதைக் கொண்டு கள்ள நோட்டு தயாரித்தார். இதற்காகவே ஒரு ஜெராக்ஸ் மெஷினையும் இந்த இருவரும் வாங்கியுள்ளனர். அதை வைத்து இதுவரை ரூ. 20,000 மதிப்புள்ள கள்ள நோட்டுக்களை இருவரும் தயாரித்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
பெரும்பாலும் திருவிழாக்களுக்குப் போய் அங்குள்ள கடைகளில் கள்ள நோட்டுக்களைப் பயன்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு தாழக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவரும் உடந்தையாக இருந்தார். அவரையும் தற்போது போலீஸார் பிடித்துள்ளனர்.