நேருக்கு நேர் மோதிய லாரி, தனியார் பேருந்து! 3 வயது குழந்தை உட்பட மூன்று பேர் பலி! தென்காசியில் ஷாக்
தென்காசி: தென்காசியில் தாது பொருட்களை ஏற்றி வந்த லாரி ஒன்று தனியார் பேருந்து மீது மோதியதில் 3 வயது குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் மலை மற்றும் ஆறுகளிலிருந்து வளங்களை அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே கேரளா மினரல் வியாபாரிகள் தமிழகத்திற்கு வந்து வளங்களை அள்ளி செல்கின்றனர். பல நேரங்களில் இதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. கூடுதல் லாரிகள் மூலம் அளவுக்கு மீறி கனிம வளங்கள் சுரண்டப்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்படியான லாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது எனவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இன்றும் இப்படியான ஒரு லாரி விபத்தில் சிக்கியிருக்கிறது. தென்காசி - மதுரை சாலையில் குத்துக்கல்வலசை அருகே இன்று காலையில் தனியார் பேருந்து மீது லாரியும் அதிவேகத்தில் மோதியிருக்கிறது. இதில் சம்பவ இடத்திலேயே 3 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கிய பேருந்து சாலையில் கவிழ்ந்திருக்கிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். விபத்து நடந்த இடத்தை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். விபத்து நடந்த சாலைக்கு என்று வேக கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், தனியார் பேருந்துகள் இதனை கொஞ்சம் கூட மதிப்பதில்லை. சில நேரங்களில் போட்டிக்காக பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுகின்றன என்றும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் தனியார் பேருந்துகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், விதி மீறலில் ஈடுபடும் லாரிகள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் தனியார் பேருந்துகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இதற்கு உதாரணம் கோயம்பேடு ஆம்னி பேருந்து விவகாரம்தான். சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் செல்லும் மக்களின் வசதிக்காகவும், சென்னைக்குள் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சென்னையின் புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்ட கடந்த ஜனவரியில் பயன்பாட்டுக்கு வந்தது.
இப்பேருந்து முனையத்தில் 2,000க்கும் அதிகமான பேருந்துகள் வரை வந்து செல்லும், இது தவிர 270 கார்கள், 3,500 பைக்குகள் பார்க் செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக தென் மாவட்டங்களுக்கு அதிக அளவிலும், மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு குறைவான அளவில் பேருந்துகளும் இயக்கப்படும். அதன் பின்னர் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேபோல ஆம்னி பேருந்துகளும் ஜனவரி 24ம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அரசு பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட்ட பின்னரும், சில நாட்கள் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிருந்துதான் இயக்கப்பட்டன. பின்னர்தான் இந்த பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட்டன.
விழா நாட்களில் விலையை கடுமையாக உயர்த்துவது, ரெகுலராக இயக்கப்படும் வழிகளில் ஆட்கள் இல்லையெனில் முன்னறிவிப்பின்றி சேவைகளை நிறுத்துவது, போட்டிக்காக பேருந்தை வேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்துவது, அப்பட்டமாக போக்குவரத்து விதிகளை மீறுவது என தனியார் பேருந்துகளின் அட்டகாசமும் தென்காசியில் இன்று நடந்த விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications