சதுரகிரி காட்டாற்று வெள்ளம்: இதுவரை 6 பேர் பலி - 4 பேரின் கதி என்ன? 4,000 பக்தர்கள் மீட்பு!!
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நான்காயிரம் பக்தர்கள் மீட்கப் பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேரைத் தேடும் பணி தொடர்கிறது. இதற்கிடையே, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நான்காயிரம் பக்தர்கள் மீட்கப் பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலையில் திடீரென நேற்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த சதுரகிரி மலை உச்சியில் சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி மற்றும் முக்கிய நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். வைகாசி அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினத்திலிருந்து பக்தர்கள் திரளாக இங்கு குவியத் தொடங்கினர். கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
இந்நிலையில், திடீரென நேற்று பகலில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆற்றைக் கடக்க முற்பட்ட பக்தர்கள் சிலர் வெள்ளத்தில் சிக்கினர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அவர்களில் நேற்று 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று மூன்று பேரின் சடலம் மீட்கப் பட்டுள்ளது. இவர்கள் தவிர, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் 4 பேரின் கதி என்ன என தெரியவில்லை.
மேலும், மழை காரணமாக சதுரகிரி மலைப் பகுதியில் சுமார் 5 ஆயிரம் மக்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர், பக்தர்களை பத்திரமாக அழைத்து வரும் பணியில் ஈடுபட்டனர்
கலெக்டர், எஸ்பி தலைமையிலான குழுவினர் நள்ளிரவு ஒரு மணி வரை மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பின்னர், மீண்டும் காலையில் மீட்புப் பணித் தொடங்கியது. இதுவரை சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் மீட்கப் பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றை விட வெள்ளத்தின் அளவு குறைந்துள்ள போதும், தொடர் மழை காரணமாக மீண்டும் வெள்ளம் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சதுரகிரி மலையிலேயே தங்க வைக்கப் பட்டுள்ளனர். தற்போது அவர்களை மீட்கும் பணி தொடங்கியுள்ளது.
மீட்கப் பட்ட மக்கள் சதுரகிரி மலை அடிவாரப் பகுதியில் பத்திரமாக தங்க வைக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. சதுரகிரி மலைப் பாதையில் பக்தர்கள் யாரும் சிக்கியுள்ளனரா என மீட்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் சுந்தரமகாலிங்கம் கோயிலில் இருந்து தாணிப்பாறை வரை ஓடைகளில் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் ஏற்படலாம் என பக்தர்களுக்கு தீயணைப்புத்துறையினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே வசிக்கும் சரவணன் (26), தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த உதயா (26), வத்திராயிருப்பைச் சேர்ந்த பொன்ராஜ் (17) எனத் தெரிய வந்துள்ளது.
38 ஆண்டுக்குப் பின்:
1977ம் ஆண்டு ஆடி அமாவாசையின் போது சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதற்குப் பின் இந்த ஆண்டு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.