சென்னை விமானநிலையத்தில் 50கி மருத்துவ ‘சிப்பி’ கடத்த முயன்ற கூலித் தொழிலாளி கைது
சென்னை: அரசு தடை விதித்துள்ள அரியவகை மருத்துவ சிப்பிகளை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற கூலித் தொழிலாளியை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நேற்று காலை சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தின் பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த பைசல் அகமது (40) என்பவரிடமிருந்த அட்டைபெட்டி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அட்டைப் பெட்டியை சுங்க அதிகாரிகள் திறந்து பார்த்த போது அதன் உள்ளே, அரிய வகை கடல் சிப்பிகள் சுமார் 50 கி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
மருத்துவ குணம் நிறைந்த, இந்த சிப்பிகளை வெளிநாடுகளுக்கு எடுத்து செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் சட்டவிரோதமாக அவற்றைக் கடத்த முயன்றதாக பைசலின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, பைசல் அகமதுவை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், சிப்பிகளை கூலிக்காக எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்தச் சிப்புகளை பைசலிடம் கொடுத்து கடத்தச் சொன்னது யார், சிங்கப்பூரில் இவற்றை வாங்க இருந்த கும்பல் எது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications