கோவை டயர் உருக்கு ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து: உடல் கருகி 6 பேர் பலி
கோவை: கோவை அருகே டயர் உருக்கு ஆலையில் கொதிகலன் வெடித்ததில் தீக்காயம் அடைந்த 6 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம், செட்டிபாளையம் - கள்ளப்பாளையம் சாலையில் ஓரட்டுக்குப்பை என்ற இடத்தில் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பா.செந்தில் என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ நாகலட்சுமி பைரோலிசிஸ் கம்பெனி இயங்கி வருகிறது.
பழைய டயர்களை துண்டு துண்டாக வெட்டி கொதிகலனில் வைத்து உருக்கி பைரோலிசிஸ் என்ற ஆயில் வெளியே எடுக்கும் பணி, அந்த ஆலையில் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்படும் ஆயில், தார் சாலை போடுவதற்கும், இரும்பு உருக்குக்கு எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அந்த ஆலை இயங்கி வருகிறது. ஆலையின் மேலாளர், மேற்பார்வையாளர் உட்பட 10 பேர் பணிபுரிந்தனர். இவர்களில் 8 பேர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். துண்டாக்கப்பட்ட பழைய டயர்களை கொதிகலனுக்குள் சென்று வைத்து சூடுபடுத்தி ஆயிலை வெளியே எடுப்பதற்கு தேவையான வேலைகளை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி கொதிகலனின் மிக அருகாமையில் மேற்குவங்க மாநிலம் அல்புரிதர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோ.சரோஜ், 23, அ.தருண் ,20, அ.குணால், 19, சு.பிர்ஜூன், 20, சி.ப்ரீத்தம், 25, தே.விகாஸ்,19 ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். அப்போது, காலை 11 மணியளவில் கொதிகலன் வெடித்து ஒரு கதவின் வழியாக சூடான அனல்காற்று, தீப்பிழம்பு, புகையுடன் கூடிய கரி ஆகியவை வெளியேறி பணியில் இருந்த தொழிலாளிகள் மீது பட்டுள்ளது.
இதில், 6 பேரின் உடல்களும் கருகின. இதையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்கள் அனைவரும் நூறு சதவீதம் தீக்காயம் அடைந்துள்ளதாகவும், 6 பேரும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
படுகாயமடைந்தவர்களிடம் கோவை 2-வது குற்றவியல் நடுவர் ராஜ்குமார் வாக்குமூலம் பெற்றார். சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆலைக்கான உரிமம் முறையாக பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
ஆலையின் உரிமையாளர் செந்தில், அவரது தந்தை பாலகுரு, மேற்பார்வையாளர் கெளதம் ஆகியோர் மீது பாதுகாப்பு குறைவாக ஆஜாக்கிரதையாக ஆலையை இயக்கி, மற்றவர்களுக்கு கொடுங்காயங்கள் ஏற்படுத்தியதாக 285 மற்றும் 337 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்றுவந்த 4 பேர் நேற்றிரவு இறந்தனர். இன்று மாலையில் 2 பேர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆலையின் உரிமையாளர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் தீக்காயமடைந்த 6 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.