கோவையை சேர்ந்த 8 அதிமுக எம்எல்ஏக்களை காணோம்... அதிமுகவினரே புகார்
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 8 அதிமுக எம்எல்ஏக்களை காணவில்லை என அக்கட்சியினர் புகார் அளித்துள்ளாதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தை சேர்ந்த 8 அதிமுக எம்எல்ஏக்களை காணவில்லை என கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி அதிமுகவினரே இந்த புகாரை அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஓபிஎஸ்க்கும் சசிகலாவுக்கும் இடையேயான முதல்வர் இருக்கைக்கான மோதல் முற்றியுள்ளது. ஓபிஎஸ் அணிக்கு பெருகும் ஆதரவைக் கண்டு பீதியடைந்துள்ள மன்னார்குடி கும்பல் அதிமுக எம்எல்ஏக்களையும் அமைச்சர்களையும் பதுக்கி சிறை வைத்துள்ளது.
இதனால் பொதுமக்கள் தங்கள் தொகுதி எம்எல்ஏக்களை காணவில்லை என புகார் அளித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மாநகராட்சியின் 52 வது வார்டு அதிமுக துணை செயலாளராக உள்ளார்.
இவர் கோவை மாவட்டத்தில் காணாமல் போன 8 அதிமுக எம்எல்ஏக்களை மீட்டு தரக்கோரி, கோவை மாநகர கமிஷனர் அமல்ராஜிடம் புகார் மனு அளித்தார். அதில் கோவை மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற உறுப்பினர்களில் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டசபை உறுப்பினர் ஆறுக்குட்டியை தவிர்த்து மீதமுள்ள 8 சட்டசபை உறுப்பினர்களை கடந்த ஒரு வார காலமாக காணவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டசபை உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், அவர்களது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாகவும் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். இதனால் நலத்திட்டப்பணிகள் முடங்கி இருப்பதாகவும், காணாமல் போன சட்டமன்ற உறுப்பினர்களை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமைச்சர் செல்லூர் ராஜை காணவில்லை என சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவினரே அதிமுக எம்எல்ஏக்களை காணவில்லை என புகார் அளித்துள்ளாதால் அவர்களை பதுக்கி வைத்துள்ள மன்னார்குடி கும்பலுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.