ஓபிஎஸ் அணிக்கு தாவ ரெடியாகும் 98 எம்.எல்.ஏக்கள்? மீண்டும் அரங்கேறுமா கூவத்தூர் கூத்து??
ஆர்கே நகர் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு கூவத்தூர் சம்பவம் அரங்கேறும்; அப்போது ஓபிஎஸ் அணிக்கு 98 எம்.எல்.ஏக்கள் தாவுவார்கள் என மாஜி எம்பி கேசி பழனிச்சாமி தெரிவித்துள்ள தகவல் பெரும் பரபர
சென்னை: ஆர்கே நகர் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தமிழகம் மீண்டும் ஒரு கூவத்தூரை சந்திக்கும்; அப்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு 98 எம்.எல்.ஏக்கள் தாவுவர் என முன்னாள் எம்.பி கே.சி. பழனிச்சாமி பரபர தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழகமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவுக்காக... அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் வெல்லப் போகும் அணியே உண்மையான அதிமுகவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
திமுக, பாஜகவுக்கு நெருக்கடி
அதேபோல் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் திமுகவும் இருக்கிறது. அதேபோல கணிசமான வாக்குகளை பெற முடியுமா என ஆழம் பார்க்கிறது பாஜக.
பெரிய சதி
இதனிடையே நியூஸ் 18 தமிழ்நாடு சேனலில் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கோவை முன்னாள் எம்.பி. கே.சி பழனிச்சாமி கூறியதாவது: ஆர்.கே.நகர் சட்டசபை தேர்தலை நடத்தவிடாமல் தடுக்க பெரிய சதியே நடக்கிறது. ஒரு கலவரத்தின் மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
மீண்டும் ஒரு கூவத்தூர் வரும்
ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் பணத்தை வாரி இறைத்து வருகிறார். என்னதான் நடந்தாலும் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவுக்குப் பின்னர் தமிழகம் ஒரு கூவத்தூரை சந்திக்கும்.
ஓபிஎஸ் அணியில் 98 எம்.எல்.ஏக்கள்
அப்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியில் 98 எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள். ஏன் திமுகவில் உள்ள முன்னாள் அதிமுகவினர் கூட எங்கள் பக்கம் வரக் கூடும்.
இவ்வாறு கே.சி. பழனிச்சாமி கூறினார்.