போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலில் போலீஸ் ஏட்டு... சென்னையில் பரபரப்பு
போலி பாஸ்போர்ட் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த உளவு பிரிவு போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: வேலியே பயிரை மேய்ந்த கதையாக, போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலோடு தொடர்பில் இருந்துள்ளார் போலீஸ் ஏட்டு ஒருவர். இந்த விவகாரம் சென்னை போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உளவு பிரிவு போலீஸ் ஏட்டாக பணிபுரிபவர் முருகன். சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிக்கு பணியமர்த்தப்பட்டிருந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக நுண்ணறிவு பிரிவுக்கான தகவல்களை சேகரித்து வந்தார்.
பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று அவர்கள் அளித்திருக்கும் ஆவணங்கள் சரிதானா? என்பதை ஆய்வு செய்வது உளவு பிரிவினரின் பணி என்பதால் அதனையும் முருகன் செய்து வந்தார்.
பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்துள்ள நபர் குறிப்பிட்ட முகவரியில்தான் வசித்து வருகிறாரா என்பதை ஆய்வு செய்யும் உளவு பிரிவு போலீசார், ஆவணங்களையும் சரி பார்த்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.
பாஸ்போர்ட் - கமிஷனர் அலுவலகம் முடிவு
இதன் பின்னரே கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பாஸ்போர்ட் பிரிவில் மறு ஆய்வு செய்யப்பட்டு பாஸ்போர்ட் வழங்குவது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். போலீசாரின் இந்த பரிந்துரைக்கு பின்னரே பாஸ்போர்ட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்கிய போலி பாஸ்போர்ட் கும்பல்
சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பாஸ்போர்ட் ஆவணங்கள் சரி பார்க்கும் பணியிலும் ஏட்டு முருகன் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் சிந்தாதிரிப்பேட்டையில் போலி பாஸ்போர்ட்டுகளை தயாரித்து வந்த ராமலிங்கம் என்பவர் பிடிபட்டார்.
பலபேருக்கு போலி பாஸ்போர்ட்
சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் தேவநேசன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது ராமலிங்கம் பலருக்கு போலி பாஸ்போர்ட்டுகளை தயாரித்து கொடுத்து இருப்பது தெரிய வந்தது. அவரது வீட்டில் இருந்து அது தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
ஏட்டு முருகனுக்கும் உடந்தை
ராமலிங்கத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பு குறித்து உளவு பிரிவு ஏட்டு முருகன் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கும் கமிஷனர் ஏ.கே.விஷ்வநாதனுக்கும் தகவல் தெரிவித்தனர். இதுபற்றி உரிய நடவடிக்கையை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டார்.
காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட முருகன்
இதனை தொடர்ந்து உடனடியாக ஏட்டு முருகன் ஒரு மாதத்திற்கு முன்னரே காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். ஏட்டு முருகனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் பாஸ்போர்ட் விசாரணைகளை சரியாக மேற்கொள்ளாமல் அதற்கு ஒப்புதல் அளித்தது தெரிய வந்தது. இதையடுத்து முருகன் இன்று கைது செய்யப்பட்டார்.
நைஜீரிய இளைஞர் இலங்கை போனார்
நைஜிரீயாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்கு சென்று இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதே போல 15 பேர் வரை மற்ற நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.
சர்வதேச கடத்தல் கும்பல்கள்
போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் சர்வதேச கடத்தல் கும்பல்கள் தமிழகத்தில் மிக சாதாரணமாக இயங்க ஏட்டு முருகன் உதவினாரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.