கடற்கரையில் இறந்து கிடந்த அரிய வகை “ஆலிவ்ரெட்லி” ஆமை – புதுவை வனத்துறையினர் மீட்பு
புதுவை: புதுவை கடற்கரையில் இறந்த நிலையில் ஒதுங்கிய 50 கிலோ எடையுள்ள அரிய வகை ஆலிவ்ரெட்லி கடல் ஆமையை வனத் துறையினர் மீட்டுள்ளனர்.
புதுவை கடற்கரைப் பகுதியில் பழைய துறைமுகம் அருகே நேற்று காலை அரிய வகை கடல் ஆமை ஒன்று இறந்து கிடந்தது. கடற்கரைச் சாலையில் நடைப் பயிற்சி மேற்கொண்ட சிலர் கடற்கரையில் பெரிய அளவிலான ஆமை இறந்து கிடப்பதாக வனத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதன் பேரில் புதுவை வனத் துறை ஊழியர்கள் இறந்து கிடந்த ஆமையை மீட்டனர்.
அது ஆலிவ்ரெட்லி இன கடல் ஆமை என்பதும், சுமார் 50 கிலோ எடையளவில் இருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த ஆமையை வனத் துறையினர், கடற்கரையி ல் புதைத்தனர்.
இது குறித்து வனத் துறையினர், " ஆழ்கடல் பகுதிகளில் இருக்கும் அரிய வகை ஆமைகள், ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் வரை கடற்கரை நோக்கி வருகின்றன.
இவைகள் பெருமளவில் இந்திய கடற்கரைப் பகுதியை நோக்கி வந்து, முட்டைகளை இட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடுகின்றன.
இந்த வகை ஆமைகள், 50 ஆண்டுகளைக் கடந்த பின்னரும், மீண்டும் முட்டையிட கடற்கரைப் பகுதிக்கு திரும்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
இவ்வாறு வரும் ஆமைகள் விசைப் படகின் இயந்திரங்களில் சிக்கியும், சீதோஷ்ண நிலை காரணமாகவும் இறந்து விடுகின்றன. இந்த அரிய வகை ஆமைகளை பாதுகாக்கும் விதத்தில் வனத் துறையினர் முயற்சித்து வருகின்றனர்.
இருப்பினும், ஆண்டுதோறும் அரிய வகை ஆமைகள் சில இறந்து விடுவதும் உண்டு. அந்த வகையில், புதுவை கடற்கரைப் பகுதியில் ஆலிவ்ரெட்லி இன கடல் ஆமை இறந்து ஒதுங்கியுள்ளது" எனத் தெரிவித்தனர்.