வேகத்தடை மீது வேகமாக ஏறி இறங்கிய அரசுப்பேருந்து.. மேற்கூரை மீது மோதி சென்னையில் பெண் பயணி பலி!
சென்னை கோயம்பேட்டில் வேகத்தடை மீது அரசுப் பேருந்து வேகமாக ஏறி இறங்கியதில் பெண் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை: கோயம்பேட்டில் வேகத்தடை மீது அரசுப் பேருந்து வேகமாக ஏறி இறங்கியதில் பெண் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு பயணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரம்பலூரில் இருந்து திருச்சி வழியாக அரசுப்பேருந்து ஒன்று இன்று காலை சென்னை வந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் ஜெயராமன் இயக்கி வந்தார்.
சென்னை கோயம்பேட்டில் நூழைவு வாயில் வழியாக பேருந்து நிலையத்துக்குள் பேருந்து சென்றது. அப்போது அங்கிருந்த வேகத்தடை மீது பேருந்து வேகமாக ஏறி இறங்கியது.
இதனால் பேருந்து பயங்கரமாக குலுங்கியது. பேருந்தில் இருந்தவர்கள் தூக்கிப்போடப்பட்டனர்.
அப்போது பேருந்தில் பயணம் செய்த சுமதி என்ற பயணி நிலைத்தடுமாறி பேருந்தின் மேற்கூரை மீது வேகமாக மோதியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலியான சுமதி அரசு ஊழியர் என தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த மற்றொரு பயணிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
ஓட்டுநரின் அலட்சியமே பெண் பயணியின் உயிரிழப்புக்கு காரணம் என சக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அரசு பேருந்து ஓட்டுநர் ஜெயராமனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன சுமதியின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.