ஆடிக்கிருத்திகை: முருகன் ஆலயங்களில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன்
சென்னை: ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
வியாழக்கிழமையான இன்று ஞானகுரு என்று போற்றப்படும் முருகப்பெருமானுக்கு ஆடிக்கிருத்திகை விழா. இதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் பக்தர்கள் குவிந்தனர்.
வடபழனி தண்டாயுதபாணி கோவிலில் அதிகாலை 3 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பகல் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தங்க கவச அலங்காரத்துடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேர்த்திக்கடன்
ஆடிக்கிருத்திகையையொட்டி, ஆண்களும், பெண்களுமாக, 5 வயதில் இருந்து 60 வயது நிறைந்தவர்கள் வரையில், புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும், அரோகரா முழக்கமிட்டு, முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
காத்திருந்த பக்தர்கள்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, வடபழனி பகுதியே திக்குமுக்காடிப் போனது. நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை கண்குளிர தரிசனம் செய்தனர்.
காவடி எடுத்த பக்தர்கள்
அரோகரா கோஷங்கள் முழங்க, பக்தர்கள் காவடி எடுத்தும் பால் குடங்கள் ஏந்தியும் ஆடிப்பாடி வந்து, முருகக் கடவுளைத் தரிசித்தனர். இதேபோல், திருச்சி, கரூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் - பழனி
முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் ஆடிக்கிருத்திகையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பழனியிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அரோகரா முழக்கம்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் அரோகரா கோஷங்களுடன் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
வல்லக்கோட்டை முருகன்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்துக்கு அருகில் உள்ள வல்லக்கோட்ட ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோயிலிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, இன்று காலை ஆடிக் கிருத்திகை விழாவும் பூஜையும் விமரிசையாக நடைபெற்றன.