அடிவருடிகளுக்கும் அடிமைகளுக்கும் தகுதி இல்லை: முதல்வருக்கு உதயநிதி பதிலடி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி பதிலடி தந்துள்ளார்.
Recommended Video
சென்னை: திமுக என்பது கட்சி இல்ல, அது ஒரு கம்பெனி, என்று கூறிய முதலமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் தந்துள்ளார். அதில் சுயமரியாதை இழந்த அடிவருடிகளுக்கும், முதுகெலும்பில்லாத அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தை பற்றி பேச துளிகூட தகுதி இல்லை என்று காட்டமாகவே உதயநிதி கூறியுள்ளார்.
சேலத்தில் நேற்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி திமுகவை கடுமையாகவே சாடினார்.
லைனுக்கு வந்துவிட்டார்
அப்போது பேசிய முதல்வர், திமுகவில் நடப்பது குடும்ப ஆட்சி என்றும் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி இப்போதே லைனுக்கு வந்துவிட்டார் என்றார்.
கட்சி அல்ல, கம்பெனி
மேலும் அதிமுகவில் உழைப்பால் உயர்ந்தவர்கள் பெரிய பதவியை கூட அடைய முடியும் என்று தெரிவித்த முதல்வர், திமுக என்பது கட்சி அல்ல, அது கம்பெனி என்று தாக்கி பேசியிருந்தார். முதலமைச்சரின் இந்த பேச்சிற்கு உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
உதயநிதி பதிலடி
அந்த பதிவில் அவர், "வரிசையில்தான் நிற்கின்றேன், கலைஞரின் உயிரினும் மேலான இயக்கத்தின் கடைமட்ட தொண்டனுக்குப் பின்னால். தலைவனாய் அல்ல, அவனுக்கும் தொண்டனாய் சேவை ஆற்றவே! சுயமரியாதை இழந்த அடிவருடிகளுக்கும், முதுகெலும்பில்லாத அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தைப் பற்றி பேச துளிகூடத் தகுதி இல்லை..." இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார்.
புகைப்படம் பதிவு
ட்விட்டரில் இந்த பதிலடியுடன் கூடவே சசிகலாவின் காலில் முதலமைச்சர் பழனிச்சாமி விழும் புகைப்படம் ஒன்றையும் உதயநிதி பதிவு செய்துள்ளார்.