சிறுவாணி அணை குடிநீர்க் குழாய் வால்வை மூடியது கேரளா; கோவைக்கு குடிநீர்த் தட்டுப்பாடு அபாயம்
கோவை நகர மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்த் தேக்க உயரம் 15 மீட்டராகும். போதிய பருவமழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. தற்போது அணையில் 2.15 மீட்டர் மட்டத்தில் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
இந்த அணை கேரளா மாநிலத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சிறுவாணி அணையில் புதிதாக கிணறு கட்டப்பட்டு அதிலிருந்து நீர் உறிஞ்சி மேலே கொண்டுவர நான்கு வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் தரை மடத்திற்கு வரும் போது, கேரளா மாநிலத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனைப்பகுதியிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் வரும் வகையில் ஒரு பெரிய குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
80-ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தடுப்பணையில் உள்ள குடிநீர்க் குழாய் வால்வு உள்ளது. வறட்சிக்காலங்களில் அணையில் 15 மீட்டருக்கு கீழ் தண்ணீர் செல்லும்போது, இந்த குடிநீர்க் குழாய் வால்வு மூலம் நீரேற்று மையத்திற்கு நீர் ஏற்றப்பட்டு வந்தது.
கடந்த 2013-ல் அணையின் நீர்மட்டம் நிலமட்டம் வரை வந்தபோது, அதாவது 15 மீட்டருக்குக் கீழ் சென்றபோது கேரள அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று குடிநீர்க் குழாய் வால்வு மூலம் நீரேற்று நிலையத்திற்கு நீர் ஏற்றப்பட்டு கோவை மாநகர மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் சிறுவாணி அணியிலுள்ள பழைய குழாயை அடைக்க வேண்டும் என, கேரள நீர்ப்பாசனத்துறை தலைமை பொறியாளர் லத்திகா, தமிழக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு நோட்டீஸ் கொடுத்தார்.'
குடிநீர் ஆதாரத்துக்காக மட்டுமே சிறுவாணி அணை கட்டப்பட்டது. சிறுவாணி தண்ணீர் வேறு நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுவதில்லை. பழைய குழாயை அடைத்தால், வறட்சியான காலத்தில் 15 மீட்டர் ஆழத்துக்கு கீழ் நீர்மட்டம் செல்லும் போது, குடிநீருக்கு தேவையான தண்ணீர் எடுக்க முடியாது. அதனால், குழாயை அடைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென தமிழக அரசு சார்பில் கேரளவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை கண்டு கொள்ளாத கேரள அரசின் நீர்பாசனத்துறை அதிகாரிகள் கடந்த 24-ம் தேதி முதல் பழைய குழாயை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். இத்தகவல் தெரிந்தும், சிறுவாணி அணை பராமரிப்பு கேரளா வசம் உள்ளதால், தமிழக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல், அரசுக்கு தகவல் மட்டும் தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்னை தொடர்பாக அவசர பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு கேரள அரசிடம் அவகாசம் கேட்டிருந்தது. ஆனால், தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்த, கேரள அரசு பேச்சுவார்த்தைக்கு அவகாசம் கொடுக்காமல், குழாயை அடைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சார்பில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மூலமாக தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சிறுவாணி பிரச்னை தொடர்பாக ஜூன் முதல் வாரத்தில் தமிழக- கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுவாணி அணையில் தற்போதையை நீர்மட்டம் 2.15 மீட்டர் அளவே உள்ளது, குறைந்த நிலப்பரப்பில் மட்டுமே தண்ணீர் உள்ளதால், இந்த நீர் அளவு தற்போது வேகமாகக் குறைந்து வருகிறது.
கேரளா அதிகாரிகள் பழைய குழாயின் வழியை அடைத்துவிட்டால் கோவை மக்களுக்கு சிறுவாணி அணையின் தண்ணீர் கிடைக்க வழியில்லாமல் போகும். தென்மேற்கு பருவமழை இரண்டொரு நாளில் பெய்யும்பட்சத்தில் மட்டுமே இனி கோவை நகர மக்களுக்கு சிறுவாணி நீர் விநியோகம் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.