தினகரன் பதவியை கொடுத்துவிடுவாரோ என்ற பீதியில் ஓட்டம் பிடிக்கும் அதிமுக நிர்வாகிகள்
தினகரன் புதிய பதவிகளை கொடுத்து விடுவாரோ என்ற பீதியில் அதிமுக நிர்வாகிகள் ஓடத் தொடங்கிவிட்டனர்.
நெல்லை: தினகரன் எங்கே தங்களுக்கு கட்சி பதவி தந்து விடுவாரோ என்ற கதி கலங்கி அதிமுக நிர்வாகிகள் ஓடி பம்ப தொடங்கியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக மூன்று அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதில் முதல்வர் எடப்பாடி தலைமையில் ஆட்சி நடக்கிறது.
ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். துணை பொது செயலாளராக அறிவிக்கப்பட்ட தினகரன் தனக்கு இருக்கும் செல்வாக்கை அறிய ஆக 14-ஆம் தேதி முதல் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனால் எந்த தலைமையை ஏற்பது என அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவினர் சிலருக்கு தினகரன் பதவி கொடுத்துள்ளார். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட சுதா பரமசிவன் இருந்து வருகிறார். இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏவை சசிகலா அமைப்பு செயலராக நியமித்தார்.
தற்போது முன்னாள் எம்எல்ஏ ஆர்பி ஆதித்தனை அமைப்பு செயலாளராக தினகரன் அறிவித்துள்ளார். இது போல் ஜெ பேரவை இணை செயலாளராக முன்னாள் எம்எல்ஏக்கள் இசக்கி சுப்பையா, மைக்கேல் ராயப்பனை தினகரன் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே கட்சி தொண்டர்கள், பொது மக்கள் சசிகலா குடும்பத்தினர் மீது காட்டமாக இருந்து வரும் நிலையில் எங்கே தங்களுக்கு கட்சி பதவி கொடுத்து சிக்கலில் மாட்டி விடுவோர்களோ என்று பயத்தில் பலரும் பதுங்க தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் தான் கட்சியின் உண்மையான விசுவாசியாக இருக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.