ஓபிஎஸ் ஈபிஎஸ் டீல் ஓகே... ஆடி போயி ஆவணி வந்தா அணிகள் இணையுமாம்
ஆடி போயி ஆவணி வரட்டும் அப்புறம் அதிமுக டாப் ஆ வரும்ல என்று தொண்டர்கள் பேசிக்கொள்கின்றனர்.
சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் நீடித்த சிக்ககல்கள் முடிந்து விட்டதாகவும், இன்றும் சில தினங்களில் அதாவது ஆவணி மாதத்தில் அணிகள் இணையும் என்று அடித்து கூறுகின்றனர் தொண்டர்கள்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் அதிமுக கட்சி மூன்றாக பிளவுபட்டுள்ளது. அதிமுக பிளவுபட்டுள்ளதால் கட்சியின் சின்னமும், கொடியும் முடக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை யாருக்கு என்பது என்பது பற்றிய தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது.
அதிமுக அணிகள் இணைந்தால் மட்டுமே கொடியும், இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இரட்டை இலை மட்டுமே அதிமுகவின் வெற்றிக்கான முக்கிய காரணம். எனவே இரட்டை இலையை மீட்கவாவது அணிகள் இணைப்பு நடக்க வேண்டும் என்பது உண்மையான அதிமுகவினரின் கோரிக்கை.
பேச்சுவார்த்தையில் இழுபறி
அதிமுக அணிகளான ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் கடந்த ஜனவரி முதலே இணைப்புக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. ஆனால் ஆளுக்கு ஒரு பேச்சு பேசுவதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
நிபந்தனைகள்
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்று நிபந்தனை விதித்தாலும், கட்சி, ஆட்சியில் பங்கு பிரிப்பதில் ஓபிஎஸ் அணி விதித்த நிபந்தனைதான் இழுபறிக்கு காரணம் என்கின்றனர். தர்மயுத்தம் நடத்தி வரும் ஒபிஎஸ் தனது ஆதரவாளர்களின் மாஸ் காட்டவே பொதுக்கூட்டம் நடத்துகிறார்.
ஈபிஎஸ் பொதுக்கூட்டம்
பதிலுக்கு ஈபிஎஸ் ஆதரவாளர்களும் தங்களின் பங்கிற்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தி மாஸ் காட்டுகின்றனர். இதற்கிடையே ரகசிய பேச்சுவார்த்தையில் டீலிங் முடிந்து விட்டதாம். விரைவில் அணிகள் இணைப்பு இருக்கும் என்று உறுதியாக கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
ஓபிஎஸ்க்கு பதவி
கட்சியில் பொதுச்செயலாளர் பதவி வழங்குவதில் சட்டரீதியாக சிக்கல்கள் உள்ளது. பொதுக்குழு, செயற்குழு கூட வேண்டும். எனவே ஓ.பன்னீர்செல்வத்துக்குச் செயல் தலைவர் பதவியும், துணை முதல்வர் பதவியும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆவணியில் இணைப்பு
சசிகலா, தினகரன் குடும்பத்தினர்களை முழுமையாகக் கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, இரு அணியும் ஒன்றிணைவதற்கு நேரம், காலம் பார்த்து வருகிறார்களாம். இப்போது ஆடி மாதம் என்பதால் ஆவணி மாதத்தில் இணைப்பு விழாவை எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
ஒரே மேடையில் ஓபிஎஸ் ஈபிஎஸ்
அணிகள் இணைந்த பின்னர் ஒபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ஒரே மேடையில் ஏறி தொண்டர்கள் மத்தியில் பேசுவார்கள் என்கின்றனர். அதிமுக உருவான தினமான அக்டோபர் 17ஆம் தேதிக்குள் அணிகள் நிச்சயம் இணைந்து விடும் என்று ஆருடம் சொல்கின்றனர்.
தினகரன் விட வேண்டுமே
எது எப்படியோ இரட்டை இலையை மீட்க வேண்டும், ஆட்சி தொடரவேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் வேண்டுகோள். அதற்கு டிடிவி தினகரனும், எதிர்கட்சியான திமுகவும் விட வேண்டுமே?