சசிகலாவை சேர்க்க ஒரு ஒட்டு.. நீக்க ஒரு வெட்டு... அதிமுகவின் சதுரங்க அரசியல்!
அதிமுகவின் நியமன பொதுச் செயலாளராக்க கட்சி விதிகளில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது போல, பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்ய மீண்டும் திருத்தம் செய்துள்ளனர்.
சென்னை: அதிமுகவின் நியமன பொதுச்செயலாளராக்க சசிகலாவை தேர்ந்தெடுத்த போது சட்ட திருத்தத்தில் மாற்றம் செய்தது போல, பொதுச்செயலாளர் பதவியே ரத்து செய்யப்பட்டு சட்டவிதியில் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்கள் செல்லுமா செல்லாதா என்று பரபரப்புகளுக்கான இறுதி முடிவு நீதிமன்றத்தின் கையில் தான் உள்ளது. 5ல் ஒரு பங்கு உறுப்பினர்களைக் கூட்டி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக அதிமுக சட்ட விதிகள் 19 முதல் 40 வரை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதா மரணமடைந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக அதிமுகவில் முதன்முறையாக நியமன பொதுச்செயலாளர் என்ற நியமன பதவி கொண்டு வரப்பட்டு அதற்காக சட்டத்திருத்தம் செய்யப்பட்டு சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அடுத்தடுத்த திருத்தங்கள்
இந்நிலையில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை சசிகலா கட்சியில் நியமித்த நீக்கங்கள், சேர்ப்புகள் அனைத்தும் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் அமைப்புச்சட்ட விதி 20(5)படி பொதுச்செயலாளர் பதவி காலியாகும்பட்சத்தில், புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, முந்தைய பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு கட்சியை வழிநடத்த வேண்டும்.

எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம்
கட்சியினரின் வசதிக்கேற்ப விதிகள் மாற்றத்திற்கு உரியதே என்று கூறுகின்றனர், எனவே எத்தனை முறை வேண்டுமானாலும் விதிகளில் மாற்றம் செய்யலாம் என்பதும் மூத்த அரசியல் நோக்கர்கள். இப்போது இந்த அணி போட்ட தீர்மானம் செல்லுமா செல்லாதா என்பது தான் அனைவர் மத்தியிலும் எழும் கேள்வி.

நீதிமன்றத்தின் கையில்
அதிமுகவின் 98 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களை கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் இவை சுட்டிகாட்டப்படும் என்று கூறப்படுகிறது. எனவே அதிமுகவின் இரு அணிகள் இணைந்து பெரும்பாலான உறுப்பினர்களின் அனுமதியோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கின்றனர்.

தீர்ப்பின் அடிப்படையில் முறையீடு
ஹைகோர்ட் தீர்ப்பை வைத்தே அதிமுகவின் சின்னத்தையும் கட்சிப் பெயரையும் தேர்தல் ஆணையத்தில் இருந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications