தென் கோடி மாவட்ட தோல்வி எதிரொலி... களையெடுப்புக்குத் தயாராகும் அதிமுக தலைமை
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல தொகுதிகளில் அதிமுக ஜெயிக்கவில்லை. இதனால் அங்கு பணத்தை பதுக்கிய முக்கிய நபர்கள் குறித்து தலைமை விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தென் மாவட்டங்களில் மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே அதிமுக ஜெயித்துள்ளது. சில மாவட்டங்களில் அதிமுக தோல்வியை தழுவியது.
இதன் விளைவாக தென் மாவட்டங்களில் எது எல்லாம் சென்டிமேண்ட் தொகுதி என அதிமுகவால் கருதப்பட்டதோ அவை எல்லாம் இந்த தேர்தலில் தோல்வியை தழுவியது. நெல்லை, தூத்துக்குடியில் பிரதான தொகுதிகள் அனைத்தையும் திமுக கைப்பற்றியது.
அதிமுகவின் இந்தத் தோல்விக்குக் காரணம், தென் மாவட்டங்களில் முக்கிய நிர்வாகிகள் சரியாக பணியாற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பலர் பணத்தை முறையாக விநியோகம் செய்யவில்லை என்றும், பலர் வாக்குச் சேகரிக்க சுணக்கம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிமுக வேட்பாளர்கள் திண்டாடினர். பல பிரமுகர்கள் அதிமுக, திமுக இரண்டும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் என்ற எண்ணத்தில், இம்முறை தலைமை அனுப்பிய பணத்தை பதுக்கி விட்டதாகவும் தெரிகிறது.
அதிலும் குறிப்பாக தென்காசி, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி தொகுதி முடிவுகள் அதிமுகவுக்கு திருப்தி தருவதாக இல்லை. இதனால் தென் மாவட்டங்களில் எந்தொந்த தொகுதிகளில் எல்லாம் யார் யார் வேலை செய்யவில்லை என கட்சி தலைமை லிஸ்ட் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அதன்முடிவில் தென் மாவட்ட அதிமுகவில் பல முக்கிய பிரமுகர்கள் களை எடுக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிமுக முக்கிய பிரமுகர்கள் பீதி அடைந்துள்ளனர்.