ஜெ. பெயரில் விருப்ப மனு கொடுத்த அதிமுகவினர்... தொண்டர்கள் கூட்டத்தால் திணறிய ராயப்பேட்டை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் இருந்து இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. நடிகர் சிங்கமுத்து உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் ஜெயலலிதா தங்களுடைய தொகுதியில் போட்டியிட விரும்பி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். ஒவ்வொருவரும் 2 தொகுதிகளுக்கு மேலாக விண்ணப்பங்களை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து இன்று முதல் விருப்ப மனு பெறப்படும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார். சென்னை ராயப்பேட்டையில் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில், இன்று முதல் வரும் பிப்ரவரி 3ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விற்பனை இன்று காலையில் தொடங்கியதால் விண்ணப்பங்களைப் பெற ஏராளமான அதிமுகவினர் தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் ராயப்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விண்ணப்பங்கள் விற்பனை
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்க அதிமுக தலைமை அலுவலகத்தில் 5 கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தது. புதுச்சேரி, கேரளா ஆகிய 2 மாநிலங்களுக்கு சேர்த்து ஒரு கவுண்டரில் விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன.
குவிந்த தொண்டர்கள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கு தனியாக 2 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 10.30 மணி முதல் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. ஆனால் அதற்கு முன்பாகவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
நீண்ட வரிசை
மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பொறுப்புகளில் உள்ளவர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள ஆண், பெண் தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதனால் விண்ணப்பம் வழங்கும் கவுண்டர்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.
மதுசூதனன் முதல் விண்ணப்பம்
முதலாவதாக அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் விண்ணப்ப படிவத்தை பெற்றார். அவரைத் தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் விண்ணப்ப படிவங்களை வாங்கிச் சென்றனர்.
ரூ. 11000
விண்ணப்பத்தை பெற்ற தொண்டர்கள் ஆர்வமாக அதை பூர்த்தி செய்தனர். இளைஞர்களும், பெண்களும் போட்டியிட விரும்பி விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்ததை காண முடிந்தது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று பிற்பகலில் சமர்ப்பித்தனர். 1 தொகுதிக்கு விண்ணப்பத்தை சமர்பிக்க ரூ.11 ஆயிரம் செலுத்த வேண்டும்.
ஜெயலலிதா பெயரில் மனு
அங்கு குவிந்திருந்த ஏராளமான தொண்டர்கள் ஜெயலலிதா போட்டியிட விரும்பி அவரது பெயரில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். ஒவ்வொருவரும் 2 தொகுதிகளுக்கு மேலாக விண்ணப்பங்களை கொடுத்தனர்.
நடிகர் சிங்கமுத்து
தலைமைக அலுவலகத்திற்கு வந்த நடிகர் சிங்கமுத்து, முதல்வர் ஜெயலலிதா போட்டியிட விருப்ப மனு அளிப்பதாக கூறினார். எத்தனை தொகுதிக்கு நீங்கள் பணம் கட்ட போகிறீர்கள் என்று கேட்டதற்கு எந்த தொகுதியில் நின்றாலும் ஜெயிப்பது உறுதி. அதனால் எல்லா தொகுதியிலுமே அ.தி.மு.க.வினர் போட்டியிடுவார்கள் என்று சிங்கமுத்து தெரிவித்தார்.
கடும் நெரிசல்
இன்று முதல் அடுத்த மாதம் 3ம்தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது. தொண்டர்கள் கூட்டத்தில் இன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டது. ராயப்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களும், பயணிகளும் பாதிப்பிற்கு ஆளாகினர். கடந்த சில வாரங்களாகவே ராயப்பேட்டை பகுதி கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகிறது. கடந்த 13, 17ம் தேதிகளில் ஜெயலலிதாவின் வருகையினால் ராயப்பேட்டை பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.